விமர்சிக்கலாம்; ஆனால் வதந்திகளை பரப்புவது பத்திரிகை சுதந்திரம் அல்ல: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புனே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் கலந்து கொண்டு பேசும் காட்சி | படம்: ஏஎன்ஐ.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புனே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் கலந்து கொண்டு பேசும் காட்சி | படம்: ஏஎன்ஐ.
Updated on
1 min read

விமர்சிக்கலாம்; ஆனால் வதந்திகளைப் பரப்புவது பத்திரிகை சுதந்திரத்தின் ஒரு பகுதி அல்ல என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

விவசாயிகளில் ஒரு பிரிவினரும், போலீஸாரும் பல்வேறு இடங்களில் மோதிக்கொண்டனர்.

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் சீக்கிய மதக் கொடியை ஏற்றினர்.

டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது டிராக்டர் விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்தி பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புனே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நான் எப்போதும் பத்திரிகை சுதந்திரத்தை விரும்புகிறேன். எனினும் அப்பணியில் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு ஊடகத்தினர் செயல்பட வேண்டும்.

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது குடியரசு தின வன்முறை பற்றி தவறாக வதந்தி பரப்பப்பட்டது. நான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருப்பதால் எப்போதும் ஊடக சுதந்திரத்தை விரும்புகிறேன்.

இது சுதந்திரமானது. அந்த சுதந்திரத்தை ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்ச்சியுடன் பராமரிக்க வேண்டும்.

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது விபத்து காரணமாக ஒரு விவசாயி பலியானார். ஆனால் பிரபல நிருபர் ஒருவர் காவல்துறையினரின் புல்லட் துப்பாக்கிச் சூடு காரணமாக விவசாயி இறந்துவிட்டார் என்று ட்வீட் செய்துள்ளார். இது பத்திரிகை சுதந்திரமா? நாட்டில் வதந்திகளைப் பரப்புவது பத்திரிகை சுதந்திரத்தின் ஒரு பகுதி அல்ல.

அரசாங்கத்தை யாரேனும் விமர்சித்தால் அவர்களை எதிர்க்கிறோம், ஆனால் நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால் செய்திகளை வெளியிடும்போது உண்மைகளை சரிபார்த்து வெளியிட வேண்டும்.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவிததார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in