Last Updated : 07 Feb, 2021 04:07 PM

 

Published : 07 Feb 2021 04:07 PM
Last Updated : 07 Feb 2021 04:07 PM

''நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது'': சிறையில் இருந்து விடுதலையான பிறகு பாரூகி கருத்து

நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று சிறையில் இருந்து விடுதலையான பிறகு நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி தெரிவித்துள்ளார்.

முனாவர் பாரூகி மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு, 35 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு சனிக்கிழமை இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில் இந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பாரூகி இந்து தெய்வங்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி ஆட்சேபகரமான கருத்துக்கள் கூறியதாக பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகன் புகார் அளித்தார். பாஜக எம்எல்ஏ மகனின் புகாரைத் தொடர்ந்து ஜனவரி 1 ஆம் தேதி பாரூகி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 28 ம் தேதி முனாவர் பாரூகி தரப்பில் கோரப்பட்ட ஜாமீன் மனுவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மறுத்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் அவர் மீது இன்னொரு வழக்கில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் தொடர்பாக பிரயாகராஜில் உள்ள நீதிமன்றம் பாரூகிக்கு எதிராக வழங்கிய கைது வாரண்டையும் உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை சிறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தமது இணையதளத்தில் பரிசோதித்த பின்னர் சனிக்கிழமை இரவு இந்தூர் மத்திய சிறையில் இருந்து ஃபாரூகி விடுவிக்கப்பட்டார் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தூரைச் சேர்ந்த நீதித்துறை தலைமை நீதிபதி சிறை அதிகாரிகளை அழைத்து, ஜாமீன் உத்தரவுக்காக உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டபிறகே சிறை அதிகாரிகள் இணையதளத்தை பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகுதான் பாரூகி விடுதலை செய்யப்பட்டார்.

பாரூகி விடுதலைப் பற்றி அறிந்த ஊடகத்தினர் சிலர் சிறைக்கு வெளியே கூடியிருந்தனர், ஆனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக பின்னடைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, எதுவும் பேசாமல் சிறைச்சாலையிலிருந்து அவர் அமைதியாக வெளியேறினார்.

பாரூகி விடுதலையான பின்னர், வலைதளம் ஒன்றில் அவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், "நான் இப்போது (மீண்டும் இந்த வழக்கில்) கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நான் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று பாரூகி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x