Last Updated : 23 Nov, 2015 02:53 PM

 

Published : 23 Nov 2015 02:53 PM
Last Updated : 23 Nov 2015 02:53 PM

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: பிப்.2 முதல் உச்ச நீதிமன்றத்தில் தினசரி விசாரணை

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 2016 பிப்ரவரி 2-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும், 2016 ஜனவரி 15-ல் இந்த வழக்கில் முடிவு செய்யப்பட வேண்டிய விவாகரங்கள் என்னவென்பதை உச்ச நீதிமன்றம் வகுக்க உள்ளது.

கடந்த மே மாதம், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உட்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. திமுக சார்பில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனுடன் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 6 நிறுவனங்களை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்ததை மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. கடைசியாக கடந்த அக்டோபர் 12-ல் இந்த மனுக்கள் விசாரணை வந்தன. அப்போது கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் திமுக செயலாளர் க.அன்பழகன் சார்பில் 6 வார காலம் அவகாசம் கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று (நவ.23-திங்கள்கிழமை) இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்களை தொகுப்பாக அளிக்குமாறு அன்பழகன் தரப்புக்கும், கர்நாடக உயர் நீதிமன்ற தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

மேலும், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

2016 ஜனவரி 15-ல் இந்த வழக்கில் முடிவு செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் என்னவென்பதை உச்ச நீதிமன்றம் வகுக்க உள்ளதாகவும் 2016 பிப்ரவரி 2-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x