Last Updated : 06 Feb, 2021 04:00 PM

 

Published : 06 Feb 2021 04:00 PM
Last Updated : 06 Feb 2021 04:00 PM

இந்தியாவில் தயாரான கரோனா தடுப்பூசியைப் பெற வரிசையில் நிற்கும் 25 நாடுகள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

ஆந்திராவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அமராவதி (ஆந்திரப் பிரதேசம்)

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள மேன் இன் இந்தியா கோவிட் -19 தடுப்பூசிக்கு 25 நாடுகள் வரிசையில் நிற்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஏற்கெனவே ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ள ஆக்ஸ்போர்ட்டின் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

அவை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் ஜனவரி 16 முதல் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

வரும் மார்ச் மாதத்தில் ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் V-க்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மருந்து ஒழுங்குமுறையை அணுகப்போவதாக மருந்து தயாரிப்பாளர் டாக்டர் ரெட்டிஸ் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவின் கோவிட் 19 தடுப்பூசிகளைப் பெற அதிக அளவிலான உலக நாடுகள் இந்தியாவை அணுகி வருவதைக் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஆந்திராவுக்கு வருகை தந்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு சனிக்கிழமை கூறியதாவது:

இப்போதே நாம் ஏற்கெனவே சுமார் 15 நாடுகளுக்கு வழங்கியுள்ளோம் என்பதை என் நினைவிலிருந்து கூறுகிறேன். மற்றும் 25 நாடுகள் இந்திய தயாரிப்பில் தயாராகியுள்ள ''மேட் இன் இந்தியா'' கோவிட் 19 தடுப்பூசிகளைப் பெற வெவ்வேறு நிலைகளில் வரிசையில் உள்ளன. இதற்காக நம்நாடு செய்துள்ள பணிகளுக்காக உலக வரைபடத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் இருந்து தடுப்பூசி பெற ஆர்வமுள்ள மூன்று வகை நாடுகள் உள்ளன - ஏழை நாடுகள், அதற்கான விலையைப் பற்றி அறிந்துள்ள நாடுகள் மற்றும் மாற்று மருந்துகளை உருவாக்கும் மருந்து நிறுவனங்களுடன் நேரடியாக கையாளும் பிற நாடுகள்.

சில ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்றன, சில நாடுகள் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு செலுத்தும் விலைக்கு இணையாக அதைப் பெற விரும்புகின்றன.

சில நாடுகளில் இந்திய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதற்காக அந்நாடுகள் வணிக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

உள்நாட்டு திறன்களையும், ஒய் 2 கே பிரச்சினையின் போது இந்தியா தகவல் தொழில்நுட்பத் தலைவராக உருவெடுத்த விதத்தையும் பயன்படுத்தி, நாட்டை "உலகின் மருந்தகம்" என்று நிறுவுவது பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையாகும்.

இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x