Published : 06 Feb 2021 01:26 PM
Last Updated : 06 Feb 2021 01:26 PM

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மாநில அரசுகளிடம் விடுங்கள்: பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி


மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் முடிவை அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்துக்கு விட்டுவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரை 11 சுற்றுப்பேச்சு நடத்தியும் எந்த உறுதியான முடிவும் இல்லை. வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை 18 மாதங்களுக்கு மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்றமும் இந்த சட்டங்களை அமல்படுத்த தடை விதித்துள்ளது. ஆனால், சட்டங்களை திரும்பப் பெற்றால்தான் திரும்பிச் செல்வோம் என விவசாயிகள் திட்டவட்டமாகக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் விவசாயிகள் போராட்டத்தில் சமூகமானத் தீர்வு காண பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடிக்கு ஆலோசனை கூறி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முடிவை அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும். இந்த வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்பும் மாநிலங்களுக்கு அந்த சட்டத்தின் பலன்களையும் மறுக்கக்கூடாது. சில மாநிலங்கள், குறிப்பாக பஞ்சாப் மாநிலம், நல்ல காரணங்களுக்காகவோ அல்லது கெட்ட காரணங்களுக்காவோ இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை.

வேளாண் துறையில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவர். அதனால்தான் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு வந்தபோது, அதற்கு ஆதரவாகவே வாக்களித்தேன்.

இந்த வேளாண் சட்டங்களுக்காக 3 முக்கிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன்.

முதல் விதி என்னவென்றால், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்த மாநிலங்களி்ல் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை கட்டுப்படுத்தினால், இந்த வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவிக்காத மாநிலங்கள், இந்த சட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்களை அனுப்பவிப்பதிலிருந்து சுதந்திரம் கொடுத்துவிடலாம்

2-வது விதி என்பது, ஒவ்வொரு மாநிலமும், குறைந்தபட்ச ஆதார விலை வழங்க நிரந்தரமான தகுதி பெறும். 3-வது விதி என்பது, வேளாண் வர்த்தகம் மட்டும் பிரதானமாக இருப்பவர்களிடம் மட்டுமே உணவு தானியங்களை வாங்க வேண்டும். பிற வர்த்தகம் செய்து கொண்டே வேளாண் வர்த்தகம் செய்பவர்கள், வர்த்தக நலன்கள் உடையவர்களிடம் தானியங்கள் வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும்

போராடும் விவசாயிகள் சங்கத்தின் கவலைகளை நாம் கருத்தில் கொண்டு இந்த விதிகள் சேர்க்கப்பட வேண்டும். இந்த விதிகள் சட்டத்துடன் சேர்க்கப்பட்டால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால், விவசாயிகள் போராட்டம் என்பது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனும் ஒற்றை இலக்குடன் மிகப்பெரியஅளவில் பெரும்பாலும் அமைதியாக நடக்கிறது.

விவசாயிகள் போராட்டத்துக்குள் இடையூறு செய்பவர்கள், தேசவிரோத சக்திகள் இருப்பதில் சந்தேகமில்லை. கூட்டமாக எங்கு கூடி, அமைதியாக தர்ணாவில் பல மாதங்களாக ஈடுபடும்போது இதுபோன்று நடக்கும். இதை கடினமாக கையாண்டு கட்டுப்படுத்த வேண்டும்

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x