Last Updated : 05 Feb, 2021 03:28 PM

 

Published : 05 Feb 2021 03:28 PM
Last Updated : 05 Feb 2021 03:28 PM

ஆதரவற்ற குழந்தைகள் முன்னேற தொடர் போராட்டம்: ஃபோர்ப்ஸ் 2021 பட்டியலில் இடம்பிடித்த பெண் வழக்கறிஞர்

30 வயதுக்குள் உள்ள சாதனையாளர்களுக்கான ஃபோர்ப்ஸ் இந்திய 2021 பட்டியலில் இடம்பிடித்த வழக்கறிஞர் பவுலோமி பாவினி சுக்லா.

லக்னோ (உத்தரப்பிரதேசம்) 

30 வயதுக்குள் உள்ள சாதனையாளர்களுக்கான ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2021 பட்டியலில் இடம் பிடித்துள்ளார் லக்னோவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர்.

லக்னோவை பூர்வீகமாகக் கொண்டவர் பவுலோமி பாவினி சுக்லா. இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். ஆதரவற்ற குழந்தைகள் கல்வி கற்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் ஃபோர்ப்ஸ் இந்தியா சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பவுலோமி பாவினி சுக்லா ஏஎன்ஐ, செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2021ம் ஆண்டுக்கான இளம் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

ஆனால் அதற்கும் மேலாக ஆதரவற்ற குழந்தைகளுக்காக குரல்கொடுக்க ஒருவரும் இல்லாத நிலையே தொடர்வதால் அந்த அவலத்தை எனக் கிடைத்த அங்கீகாரத்தால் நான் முன்னிலைப்படுத்தவே விரும்புகிறேன்.

ஆதரவற்ற குழந்தைகளின் குரலை வலுப்படுத்தும் இந்த இயக்கத்தில் அதிக அளவிலான மக்கள் சேரவேண்டும் என வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

ஆதரவற்றவர்களின் அவல நிலையை முன்னிலைப்படுத்துதற்கான நோக்கம் அவர்களுக்கு கல்வி கற்க வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதுதான்.

நம் நாட்டில் சுமார் 2 கோடி ஆதரவற்றக் குழந்தைகள் உள்ளனர். மேலும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையைப் பார்த்தால் நிலைமையை மேம்படுத்துவதற்கு கணிசமான ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலை நான் உணர்ந்தேன். அதன்பிறகு நான் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தேன். இதற்காக நான் பல சட்ட மேதைகள், முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்தித்தேன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உத்தரகண்ட் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது, அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கோவா மற்றும் டெல்லி கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவர்களை அங்கீகரித்துள்ளன, அதேசமயம் அவர்களுக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடும் இரட்டிப்பாகியுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளை முன்னேற்ற வேண்டுமென்பது எனது லட்சியப்பாதை. அதில் நான் மேற்கொண்டுள்ள பயணம் 2011 இல் எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது தொடங்கிவிட்டது.

எனது தாயார் ஹரித்வாரில் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அந்த ஆண்டு ஒரு வலுவான பூகம்பம் குஜராத்தின் பூஜ் நகரத்தை உலுக்கியது. இயற்கைப் பேரழிவினால் பல குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகினர்.

சில குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஹரித்வார் வந்திருந்தனர். அப்போது என் அம்மா அங்கே அழைத்துச் சென்றிருந்தார். நான் அந்தக் குழந்தைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் நட்பு கொண்டேன்.

ஒருமுறை நான் கல்லூரியில் படித்தபோது, ​​பூஜ் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண், கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு வேண்டுகோளுடன் என்னை அணுகினார். நான் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏதாவது சில திட்டங்கள், அனுமதி பெறுவதற்கான முறைகள், உதவித்தொகைகள் வழங்கப்படுவதற்கான வழிகள் இருக்கின்றனவா என தேடிப் பார்த்தேன்.

அதிர்ச்சிகரமான ஒரு செய்தி, அத்தகைய வாய்ப்புகள் வழிமுறைகள் எதுவும் அவர்களுக்காக இல்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நான் 11 மாநிலங்களுக்குச் சென்றேன் களப்பணி மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தினேன். இதன் அடிப்படையில் இக்குழந்தைகளின் அவலக் கதைகளை ஒரு புத்தகமாக எழுதினேன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு எனது முயற்சியால் கிடைத்த உதவிகள் வெகு சொற்பமானதுதான். இந்தப்போராட்டம் இத்தோடு முடிவடையப் போவதில்லை.

இக்குழந்தைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இல்லை என்பதுதான் கொடுமை. அவர்களை மக்கள் தொகையில் சேர்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

அரசாங்கங்கள் முறையான திட்டங்கள், உதவித்தொகை மற்றும் கல்வி உரிமையின் கீழ் அவர்களின் அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும், இதனால் அவர்கள் சிறந்த வாழ்க்கை வாழ முடியும்.

இவ்வாறு வழக்கறிஞர் பவுலோமி பாவினி சுக்லா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x