Last Updated : 05 Feb, 2021 10:43 AM

 

Published : 05 Feb 2021 10:43 AM
Last Updated : 05 Feb 2021 10:43 AM

மன்னித்துவிடு மரியா: சச்சினைத் தெரியாது எனக் கூறிய ஷரபோவாவிடம் மன்றாடிய ஆயிரக்கணக்கான மலையாள நெட்டிசன்கள்: திருச்சூர் பூரத்து அழைப்பு

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா: படம் உதவி | ட்விட்டர்.

திருவனந்தபுரம்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீது ஆத்திரமடைந்த கேரள நெட்டிசன்கள், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து மன்னிப்பு கேட்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டில் டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா, தனக்கு சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது எனத் தெரிவித்திருந்தார். அதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் சச்சின் மீது ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரைக் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாக மரியா ஷரபோவாவிடம் நடந்துகொண்ட முறைக்கு நெட்டிசன்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

மன்னிப்புக் கேட்ட நெட்டிஸன்கள்

அதுமட்டுமல்லாமல் கேரளத்தைச் சேர்ந்த பல நெட்டிசன்கள், மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு வர வேண்டும், கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபின் திருச்சூர் பூரம் பண்டிக்கைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தனர்.

மலையாள நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில், “ஷரபோவா, நீங்கள் சச்சினைப் பற்றி சரியாகத்தான் கூறியுள்ளீர்கள். தரமான மனிதர் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்பதை அறிந்த ஷரபோவா ட்விட்டரில், “யாருக்கேனும் ஆண்டுகள் பற்றி ஏதேனும் குழப்பம் வந்துவிட்டதா” எனக் கேட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மரியா ஷரபோவாவை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வசை பாடியவர்கள் பலரும் கடந்த சில நாட்களாக மன்னிப்பு கோரி வருகின்றனர்.

மரியா ஷரபோவாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில், “ மன்னித்துக் கொள் மரியா. நீங்கள் பெரிய லெஜண்ட். சச்சினை எங்களுக்கு வீரராகத்தான் தெரியும். ஆனால், ஒரு மனிதராகத் தெரியாது. ஆனால், நீங்கள் சரியாகத்தான் கணித்தீர்கள். உங்களைத் தவறாகப் பேசியதற்கு மன்னிக்கவும்” எனத் தெரிவித்திருந்தார்.

மற்றொருவர், பதிவிட்ட கருத்தில், “ஷரபோவா உங்களுக்கு ஷவர்மாவும், குழிமந்தி பிரியாணியும் தந்து மன்னிப்பு கோருகிறேன். ஒரு லாரி நிறைய மன்னிப்பு ஏற்றி வருகிறேன்” என நகைச்சுவையாக மன்னிப்பு கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x