

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜீப் பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நேற்று பாஜகவில் சேர்ந்தார். அவருடன் திரிணமூல் காங்கிரஸில் (டிஎம்சி) இருந்து விலகிய முக்கிய பிரமுகர்கள் பைஷால் டால்மியா, ஹவுரா முன்னாள் மேயர் ரதின் சக்கரவர்த்தி, பிரபிர் கோஷல், நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோரும் பாஜகவில் சேர்ந்தனர். பின்னர், ஹவுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் மேற்கு வங்கம் எல்லா துறைகளிலும் பின்னோக்கிச் செல்கிறது. மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி அநீதி இழைக்கிறார். அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் கட்சிக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு தனது சுயலாபத்துக்காக மத்திய அரசை எதிர்க்கும் திரிணமூல் காங்கிரஸை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்க மக்களுக்கும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை, சொந்தக் கட்சியினரிடமும் உண்மையாக இல்லை. இதனால், அதிருப்தி அடைந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் நடக்க உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்லின் முடிவில் மம்தா பானர்ஜி மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருப்பார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.