Last Updated : 31 Jan, 2021 12:06 PM

 

Published : 31 Jan 2021 12:06 PM
Last Updated : 31 Jan 2021 12:06 PM

எங்களை பாஜக பி டீம் என்பதா; காங்கிரஸ், திரிணமூல் கட்சி எம்எல்ஏக்கள் என்னைக் கேட்டு பாஜகவுக்கு சென்றார்கள்?: ஓவைசி கேள்வி

கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி.

கலாபுராகி

எங்களைப் பார்த்து பாஜக பி டீம் என்பதா, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் என்னைக் கேட்டா பாஜகவுக்கு சென்றார்கள் என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கலந்துகொண்டார்.

கல்புருகியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஓவைசி பேசியதாவது:

ஏஐஎம்ஐஎம்முக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர், ஒரு காலத்தில் காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட பேண்ட் வாத்திய கட்சி, எங்களை பாஜகவின் பி டீம் என்கிறார்கள். பின்னர் மம்தா பானர்ஜியும் இதே போல சொல்லத் தொடங்கினார். அதேபோல நானும் அவர்களைப் பற்றி பேச முடியும். உண்மையைச் சொல்லவேண்டுமெனில் நான் யாருக்கும் சொந்தமல்ல, மற்றவர்களைப் போல பொதுமக்களில் ஒருவன் அவ்வளவுதான்.

கர்நாடகாவில் நீங்கள் என்ன செய்தீர்கள். கர்நாடகாவில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெருமளவில் தங்கள் இடத்தை மாற்றிக்கொண்டு பாஜகவில் சேர்ந்தனர். இதைச் செய்வதற்கு முன்பு அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டு கட்சி மாறினார்களா. அவர்கள் அனைவரும் இப்போது பாஜகவில் சேர்ந்துவிட்டார்கள்.

மேலும் அவர்கள் இப்போது அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் இப்போது அவர்களை சாதாரணமாக பார்க்க முடியாது. தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு செல்வதைப்பற்றியெல்லாம் மம்தாவோ காங்கிரஸும் ஏன் பேசுவதில்லை.

ஏஐஎம்ஐஎம் என்று வரும்போது மட்டும் பாஜகவின் பி டீம் என்று விமர்சினம் செய்வது எளிதாகிவிடுகிறது. ஆனால் உங்கள் கட்சி என்று வந்தால் உடனே எம்எல்ஏக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று கூறிவிடுகிறீர்கள்.

பாஜக மீது விமர்சனம்

மகாத்மா காந்தி 30 ஜனவரி 1948 அன்று கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. பாஜகவினர் காந்தியை நம்பவில்லை, அம்பேத்கர் அல்லது சுபாஷ் சந்திரபோஸைக் கூட அவர்கள் நம்பவில்லை. அவர்கள் கோட்சேவைப் பின்பற்றுபவர்கள். ஒருபுறம், பாஜகவினர் காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள், மறுபுறம், அவர்கள் காந்தியின் படுகொலைக்கு சதிகாரரான சவார்க்கரை வணங்குகிறார்கள்.

மகாத்மா காந்தி படுகொலைக்கு சாவர்க்கர் ஒரு சதிகாரர் என்று நீதிபதி கபூர் கமிஷன் அறிக்கை கூறியதால் நான் இங்கே சாவர்க்கரின் பெயரையும் நான் எடுத்துக்கொள்கிறேன். காந்தியின் படுகொலை குறித்து அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் முறையாக விசாரித்திருந்தால், ஆர்எஸ்எஸ் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பார். ஆனால் காங்கிரஸ் சரியாக விசாரிக்கவில்லை.

இவ்வாறு ஓவைசி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x