

உலகை ஆட்டிப்படைத்து வரும் ஐஎஸ் அமைப்பில் இணைந்த காஷ்மீர் இளைஞர் பாரீஸ் தாக்குதல்களுக்கு 6 நாட்களுக்கு முன்னதாக ‘நான் உடனடியாகத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை’ என்று தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
'இப்போதைக்கு நான் திரும்புவது இயலாது, என்றாவது ஒருநாள் வருவேன், இன்ஷாஅல்லா' என்று தனது சகோதரனுடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரின் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அடில் வாதா, கமீல்வாதா சகோதரர்கள். 28-வயதான அடில் வாதா மூத்தவர். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள குவீன்ஸ்லாந்து கல்லூரி ஒன்றில் வர்த்தக மேலாண்மை பட்டம் பெற்றவர். இவர் காஷ்மீரிலிருந்து 2013-ம் ஆண்டு ஐஎஸ்.-ல் சேர்ந்த முதல் நபர் என்று கருதப்படுகிறது.
கடந்த வாரம் இளைய சகோதரர் கமீலுக்கு அடில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு தான் உடனடியாகத் திரும்ப வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
தனது மூத்த சகோதரர் அடில் வாதா பற்றி கமீல் கூறும்போது, தனது சகோதரர் ஆசைகளும் லட்சியங்களும் நிரம்பிய நடுத்தர வர்க்க இளைஞர்தான், சிறுவயது முதலே மதம் தொடர்பான நாட்டம் உடையவர், பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடனேயே மும்பையில் உள்ள கால்சென்டரில் பணியாற்றினார்.
“அடில் எப்பவுமே நல்ல வேலை வேண்டும் என்று விரும்புபவர், விமானத்தில் கூட பிசினஸ் கிளாஸில் பயணம் செய்வேன் என்றே அடிக்கடி கூறுவார்” என்றார் கமீல். ஆனால் தனது சகோதரர் ஐஎஸ்.-ல் இணைந்திருப்பார் என்பதை கமீல் மறுத்தே வருகிறார். மேலும் தனது சகோதரர் மேற்கத்திய உடைகளை அதிகம் விரும்பினார் என்றும் ஸ்கைப்பில் அவ்வப்போது குடும்பத்தினருடன் உரையாடும் போது அமைதியாக எந்த வித பதற்றமும் இல்லாமலும் பேசுவார் என்றும் கூறுகிறார் கமீல்.
தனக்கு 5 முறை தொழுகை செய்ய அறிவுரை வழங்குவார் அடில் என்றார் அவர்.
ஐஎஸ்-ல் அடில் இணைந்துள்ளார் என்று 2014-ம் ஆண்டு பாதுகாப்பு படை அதிகாரி இவர் குடும்பத்தினரிடம் தெரிவித்த போது அவர்களால் நம்பவே முடியவில்லை.
அதாவது துருக்கியில் தொண்டு நிறுவனத்தில் இருந்து கொண்டு சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்து வருவதாக அடில் தெரிவித்துள்ளதாகவே குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்தவுடனேயே அடிலின் போக்கில் மாறுதல் இருந்தது என்றும், இஸ்லாமிய மத விதிமுறைகளின் படி தாடி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இருந்த போது இஸ்லாமிய அமைப்பு ஒன்றுடன் அவர் நெருங்கிப் பழகியதையடுத்து ஐஎஸ் ஆர்வம் அவருக்கு தலைதூக்கியிருக்கலாம் என்று குடும்பத்தினர் கருதுகின்றனர்.
அவர் சிரியாவிலிருந்து ஒருமுறை கூறும்போது, “மேற்கத்திய ஊடகங்கள் இப்பகுதிகளை பற்றி பொய் கூறிவருகிறது இங்கு யாரும் காட்டுமிராண்டி கிடையாது” என்று தெரிவித்ததையும் அடில் நினைத்திருந்தால் காஷ்மீர் தீவிரவாதத்தில் இணைந்திருக்கலாம் ஆனால் அவர் செய்யவில்லையே” என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், காஷ்மீரில் அவ்வப்போது போராட்டங்களில் ஐஎஸ் கொடி தலைதூக்கினாலும் அங்கு அந்த அமைப்பினர் இருப்பதாக தெரியவில்லை என்று கமாண்டிங் பிரிவு பொது அதிகாரி நிம்போர்கர் கூறுகிறார்.