

கரோனா எதிரொலியாக 2021-ம் ஆண்டின் ஏரோ இந்தியா கண்காட்சியில் விளக்கக் குறிப்புகள், கைப்பிரதிகள் பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
13-வது ஏரோ இந்தியா – 2021 சர்வதேச விமானக் கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் 3-ந் தேதி பெங்களூரூவில் உள்ள ஏலஹங்கா விமானப்படை தளத்தில் தொடங்க உள்ளது. 5-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உத்தேசித்துள்ளது.
குறிப்பாக டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்ட நிர்பய் உள்ளிட்ட ஏவுகணைகள், விமானங்கள் போன்ற 300-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை உள் மற்றும் வெளி அரங்குகளில் காட்சிக்கு வைப்பதோடு பொதுமக்களுக்கு செயல்படுத்திக் காட்டப்படும்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் கண்காட்சி தொடர்பான வழிகாட்டுதல்கள், ஏவுகணைகள், புதிய கண்டுபிடிப்புகள், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் போன்றவற்றுக்கான விளக்கக் குறிப்புகள், கைப்பிரதிகள் பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்கப்பட இருக்கிறது.
கண்காட்சி தொடக்க விழா நாளன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், டிஆர்டிஓ-வின் ஏற்றுமதி தொகுப்பு கையேடு, புதிய உற்பத்திக்கான வடிவமைப்பு போன்றவைகளை வெளியிட உள்ளார்.