Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

பஞ்சாப், ஹரியாணாவில் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 60 உணவு கிடங்குகளில் சிபிஐ சோதனை

பஞ்சாப், ஹரியாணாவில் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 60 உணவு கிடங்குகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்குஎதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த இரு மாநிலங்களில் செயல்படும் இந்திய உணவு கழகத்தின் கிடங்குகள் மற்றும் மாநில அரசுகளின் உணவு கிடங்குகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை மதியம் வரை இரு மாநிலங்களிலும் சுமார் 60-க்கும் மேற்பட்ட கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. சுமார்20-க்கும் மேற்பட்ட சிபிஐ குழுக்கள் சோதனையை நடத்தின.

சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைந்துள்ள கிடங்குகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கடந்த 2019-20, 2020-21-ம் ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட கோதுமை, அரிசியின் மாதிரிகளை சிபிஐ அதிகாரிகள் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உணவு தானியங்களும் பஞ்சாப், ஹரியாணாகிடங்குகளில் முறைகேடாககொள்முதல் செய்யப்பட்டிருப் பதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 2 கிடங்குகளில் பிஹாரைச் சேர்ந்த அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாபில் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசும் ஹரியாணாவில் முதல்வர்மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக அரசும் ஆட்சி நடத்திவருகின்றன. சிபிஐ நடத்திய சோதனை குறித்து இரு மாநிலங்களின் அரசுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை.

சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "உணவு கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களின் அளவு, தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு சதி செய்வதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x