Last Updated : 29 Jan, 2021 12:45 PM

 

Published : 29 Jan 2021 12:45 PM
Last Updated : 29 Jan 2021 12:45 PM

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை துரதிர்ஷ்டமானது; விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் உரையில் கண்டனம்

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது நடந்த வன்முறை துரதிர்ஷ்டமானது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் கண்டனம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும் நடக்கும். அதன்பின் மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை 2-வது அமர்வு நடக்க உள்ளது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் 18 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை இன்று புறக்கணித்தன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில், டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் தன் உரையில் குறிப்பிடுகையில், ''டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை மிகவும் துரதிர்ஷ்டமானது. கடந்த சில நாட்களாக தேசியக் கொடியும், அதிலும் புனித நாளான குடியரசு நாளில் அவமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டம்.

நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்குப் பேச்சு சுதந்திரத்தை அளித்துள்ளது. அதே அரசியலமைப்புச் சட்டம்தான், சட்டத்தையும் விதிகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் 10 கோடி விவசாயிகளுக்கு உடனடியாகப் பலன் அளிக்கும்” எனத் தெரிவித்தார்.

அப்போது அவையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. ரவ்நீதி பித்து எழுந்து, “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என முழக்கமிட்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். சில எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x