உள்ளூர் மக்களின் கடமை உணர்வால் நக்சல் தீவிரவாதம் குறைந்துள்ளது: என்சிசி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உள்ளூர் மக்களின் கடமை உணர்வால் நக்சல் தீவிரவாதம் குறைந்துள்ளது: என்சிசி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
Updated on
1 min read

உள்ளூர் மக்களின் கடமையுணர்வு ஆயுதப்படைகளின் வீரம் ஆகியவற்றால் நாட்டில் நக்சல் தீவிரவாதம் குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தற்போது நக்சல் பாதிப்பு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படையின் (என்சிசி)அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:

கடந்த ஆண்டு, வெள்ளம் அல்லது வேறு எந்தப் பேரிடராக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு என்சிசி மாணவர்கள் உதவினர். கரோனா பாதிப்பு காலத்தில் நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான என்சிசி மாணவர்கள் அரசு நிர்வாகத்துடனும் சமூகத்துடனும் இணைந்து பணியாற்றினர். இது மிகவும் பாராட்டத்தக்கது. என்சிசி.யின் பங்கு மேலும் விரிவடைவதைக் காண அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எல்லை மற்றும்கடலோரப் பகுதியில் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதில் என்சிசியின் பங்களிப்பு உயர்த்தப்பட்டு வருகிறது.

உள்ளூர் மக்களின் கடமையுணர்வு ஆயுதப்படைகளின் வீரம் ஆகியவற்றால் நாட்டில் நக்சல் தீவிரவாதம் குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தற்போது நக்சல் பாதிப்பு உள்ளது.

கடலோர மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள சுமார் 175 மாவட்டங்களில் என்சிசி.க்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்காக சுமார் 1 லட்சம் என்சிசி மாணவர்களுக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையால் பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள் ஆவர். இவர்கள் கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவார்கள்.

இந்தியாவின் திறன்

ராணுவ சாதனங்களுக்கு ஒரு சந்தையாக இல்லாமல், அதை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா அறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வைரஸாக இருந்தாலும் அல்லது எல்லையில் சவால்களாக இருந்தாலும் அதைக் கையாளுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்
கைகளும் எடுக்கும் திறனை இந்தியா கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கலாச்சார நிகழ்ச்சிகள்

இந்த நிகழ்ச்சியில் என்சிசி படையினரின் அணிவகுப்பை பிரதமர் பார்வையிட்டார். மேலும் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in