Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்; நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சிகள் புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவரது உரையை புறக்கணிக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

கரோனா வைரஸ் பரவல் காரண மாக கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தாமதமாக தொடங்கி, முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வில்லை. இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரை நடக்கிறது. 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பிறகு இரண்டாம் அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்க 18 கட்சிகள் முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மதிமுக, கேரள காங்கிரஸ் (எம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் சார்பில் கூட்டறிக்கையும், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் தனித்தனியாகவும் தங்கள் முடிவை தெரிவித்துள்ளன.

கூட்டறிக்கை

எதிர்க்கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக் கையில் கூறியிருப்பதாவது:

புதிய வேளாண் சட்டங்கள் நாடாளு மன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறை வேற்றப்பட்டன. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை அழிக்கப் படுகிறது. புதிய வேளாண் சட்டங் களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 26-ம் தேதி நடந்த பேரணியில் மத்திய அரசின் சதியால் வன்முறை ஏற்பட்டது. விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தற்போது விவசாயிகள் குறித்து எதிர்மறையான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

விவசாயிகளின் விருப்பப்படி புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒரு மித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன. ஜனநாயக முறையில் போராடி வருகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் ஆணவ போக்குடன் செயல்படுகின்றனர். எனவே, மத்திய அரசின் போக்கைக் கண்டித்து குடியரசுத் தலைவர் உரையை புறக் கணிக்கிறோம்.

இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும் போது, “குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும். அனைத்து பிரச் சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x