Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

அகன்ற வங்கதேசம் ஏற்படுத்த மம்தா பானர்ஜி விரும்புகிறார்: பாஜக தலைவர் திலீப் கோஷ் குற்றச்சாட்டு

கொல்கத்தா

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் முதல்வர் மம்தா படத்துடன் நேற்றுவெளியிட்டுள்ள பதிவில், “இஸ்லாமிய பங்களாதேஷின் தேசியமுழக்கமான ‘ஜெய் பங்ளா’ முழக்கத்தை மம்தா பானர்ஜி தனது கூட்டங்களில் முழுங்குகிறார். அகன்ற பங்களாதேஷ் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பாடுபட்டு வருகிறார்” என்று கூறியுள்ளார்.

திலீப் கோஷ் தனது பதிவுடன், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காக வங்கதேச நடிகர் ஃபிர்தாஸ் பிரச்சாரம் செய்த 2 புகைப்படங்கள், வடக்கு கொல்கத்தாவில் திரிணமூல் எம்எல்ஏ ஒருவர் ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையை வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் தொடங்கி வைக்கும் புகைப்படம் ஆகியவற்றையும் இணைத்துள்ளார்.

நேதாஜியின் 125-வது பிறந்த நாளையொட்டி கொல்கத்தாவில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். இதில் மம்தா பேச எழுந்தபோது, கூட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து ‘ஜெய்ராம்’ என கோஷம் எழுப்பப்பட்டது.

இதையடுத்து மம்தா, “இது அரசியல் நிகழ்ச்சி அல்ல, அரசு விழா. இதற்கு கண்ணியம் வேண்டும். ஒருவரை விழாவுக்கு அழைத்துவிட்டு, அவரை அவமதிப்பது சரியல்ல. நான் பேச மாட்டேன். ஜெய் பங்ளா, ஜெய் ஹிந்த்” என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். இந்நிலையில் திலீப் கோஷ் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x