Last Updated : 28 Jan, 2021 03:31 PM

 

Published : 28 Jan 2021 03:31 PM
Last Updated : 28 Jan 2021 03:31 PM

நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டம்: குடியரசு தலைவர் உரையை நாளை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு; கூட்டறிக்கை வெளியிட்டு கண்டனம்


2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்கூட்டம் நாளை தொடங்கும் போது, நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றும் உரையை புறக்கணிக்கப்போவதாக 16 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், கலவரத்தில் மத்திய அரசின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று தெரிவி்த்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்றக் கூட்டக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். அதன்பின் 31-ம்தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் நாளை நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றும் உரை ஆற்றும்போது அதில் பங்கேற்காமல் புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத் இன்று நிருபர்களிடம் கூறுகையில் “ நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் இன்றி வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பாஜக அரசு தன்னிட்சையாக கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாய கூலிகள் ஆகியோரின் வாழ்வாதாரம், 60 சதவீதம் மக்கள் சார்ந்திருக்கும் வேளாண்துறையின் எதிர்காலமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

டெல்லியின் எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிர், மழையைப் பொருட்படுத்தாமல், உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடி வருகிறார்கள். 155 விவசாயிகள் இதுவரை போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் மத்திய அரசு தன் நிலையிலிருந்து மாறாமல், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பதில் அளிக்கிறது.

விவசாயிகளின் போராட்டம் அமைதியாகவே நடந்திருக்கிறது. துரதிருஷ்டமாக கடந்த 26-ம் தேதி சில வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையில் டெல்லி போலீஸார் அடைந்த காயத்துக்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த கலவரம் தொடர்பாக சார்பற்ற விசாரணை நடத்தி, இதில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.

வேளாண் சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதல், அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்தை மீறுவதாகும். இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், இந்தியாவின் உணவுப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஆதாரவிலை, பொதுவிநியோக முறையை சிதைத்துவிடும்.

மாநிலங்களுடனும், வேளாண் சங்கங்களுடனும், தேசிய கருத்தொற்றுமை இல்லாமல், எந்தவிதமான ஆலோசனை, விவாதங்கள் இல்லாமல், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதங்கள் இல்லாமல், எதிர்க்கட்சிகளை அடக்கி வைத்து இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது அப்பட்டமான நாடாளுமன்ற விதிமுறை, செயல், மரபு மீறல். இந்த சட்டத்தின் அரசியலமைப்பு அந்தஸ்தும், நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

பாஜக அரசும், பிரதமரும் அகங்காரத்துடனும், பிடிவாதத்துடனும், ஜனநாயக விரோதத்துடன் நடக்கிறார்கள். மத்திய அரசு உணர்வற்று இருப்பது அதிரச்சியளிக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் உரையை நாளை 16 எதிர்க்கட்சிகளும் சேர்ந்து புறக்கணிக்கிறோம்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x