Published : 27 Jan 2021 09:51 PM
Last Updated : 27 Jan 2021 09:51 PM

நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தள்ளி வைப்பு; டெல்லி வன்முறையால் விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் அன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.

இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர். டெல்லியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீஸார் காயமடைந்தனர் .

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் சார்பில் 15 முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் திசை மாறியதால் அதனை முடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. டெல்லி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் அன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் கூறுகையில் ‘‘டிராக்டர் பேரணி பெருமளவு அமைதியாகவே நடந்தது. ஒரு சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் பின்னணியில் அரசு உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது. இதுபோன்ற சூழலில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை தள்ளி வைக்கிறோம்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x