Last Updated : 27 Jan, 2021 05:58 PM

 

Published : 27 Jan 2021 05:58 PM
Last Updated : 27 Jan 2021 05:58 PM

ஆடைகள் மேலே தொடுவது போக்சோவில் வராது; மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கோப்புப்படம்

புதுடெல்லி

சிறுமியை ஆடைகளோடு அந்தரங்க இடங்களில் தொடுவது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சீண்டலாகாது, குற்றமாகாது எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒருவரை விடுவித்தது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு கடந்த 19-ம் தேதி அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கடந்த 2016-ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஸ் என்பவர் 12 வயதுச் சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்குச் சாப்பிட உணவுப் பொருட்களைக் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தச் சிறுமியின் ஆடைகளைக் களைய முயன்ற அந்த நபர், மார்பகங்களை அழுத்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சதீஸுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், ஐபிசி 354-வது பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலா கடந்த 19-ம் தேதி குற்றவாளி என செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்த நபரைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார். நாக்பூர் அமர்வு அளித்த தீர்ப்புதான் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

அந்தத் தீர்ப்பில், “12 வயதுச் சிறுமியின் ஆடைகளைக் களையாமல், அந்தச் சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பதும், தொடுவதும் பாலியல் துன்புறுத்தலில் சேராது. இது போக்சோ சட்டத்திலும் வராது. ஐபிசி 354-வது பிரிவில் மட்டுமே வரும். அதற்குக் குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை மட்டுமே வழங்கலாம்.

12 வயதுச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் மார்பகங்களை அழுத்தினார் என்பதற்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இல்லை. அந்தச் சிறுமியின் மேல் ஆடைக்குள் கையை நுழைத்து மார்பகங்களை அழுத்தினாலும் அது பாலியல் வன்கொடுமையில் வராது. பாலியல் வன்கொடுமை என்பது, ஆடைகள் இன்றி, உடலோடு உடல் தொடர்பு கொள்வதுதான்.

ஆதலால் அந்தச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் மார்பகங்களைத் தொட்டதால் அது பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது. ஆதலால், அந்த நபரை விடுவிக்கிறேன். அவர் ஏற்கெனவே போதுமான அளவு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார்” எனத் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், “மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். போக்சோ சட்டத்தின் நோக்கமே பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர்களைத் தண்டிக்கவே கொண்டுவரப்பட்டது. எதிர்காலத்தில் இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முடியும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்துள்ளது. ஆனால், அந்தத் தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் ஓராண்டு சிறையாக ஐபிசி 354-வது பிரிவின் கீழ் குறைத்து அந்த நபரை விடுவித்துள்ளது. இது வேதனைக்குரிய தீர்ப்பு” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, பிறப்பித்த உத்தரவில், “மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்கிறோம். மகாராஷ்டிர அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். மேலும் தீர்ப்பை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் தரப்பில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்குகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x