Published : 27 Jan 2021 05:33 PM
Last Updated : 27 Jan 2021 05:33 PM

தேவை அதிகமுள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் சவாலை எதிர்கொள்கிறோம்: ஹர்ஷ் வர்தன்

புதுடெல்லி 

உலகெங்கும் தடுப்பூசியின் தேவை அதிகமுள்ள மக்களுக்கு இதனை வழங்கும் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் 148-வது கூட்டம் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நிறைவுரை வழங்கிய அமைச்சர், சுமார் ஓராண்டுக்கு முன்பு கோவிட்-19 பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது முதல் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் அனைத்து நாடுகளும் இணைந்து போராடி வருவதாகத் தெரிவித்தார்.

“2020, கோவிட் தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆண்டாக விளங்கியது. 2021-ல் உலகெங்கும் தடுப்பூசியின் தேவை அதிகமுள்ள மக்களுக்கு இதனை வழங்கும் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும்”, என்று அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து உறுப்பினராக செயல்பட்டு நிதி உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான டாக்டர் ஆண்டனி ஃபாசி வெளியிட்ட அறிவிப்பை ஹர்ஷ் வர்தன் வரவேற்றார்.

நோய்த் தடுப்பு பணி நிரல் 2030-க்கு ஒருமித்த ஆதரவு வழங்கப்பட்டது குறித்து பேசிய அவர், “நோய் தொற்று அதிகம் ஏற்படக்கூடிய பிரிவினருக்கும், ஏற்றத்தாழ்வை குறைக்கவும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x