Last Updated : 26 Jan, 2021 03:34 PM

 

Published : 26 Jan 2021 03:34 PM
Last Updated : 26 Jan 2021 03:34 PM

வன்முறையாக மாறிய விவசாயிகள் போராட்டம்: டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் டிராக்டர் பேரணியில் ஒருதரப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் விவசாயிகள் மீது போலீஸார் தடியடியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைத்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகளுக்கு போலீஸார் தரப்பில் இன்று அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மத்திய டெல்லி பகுதிக்குள் வராமல் புறநகர் பாதையில் செல்ல வேண்டும், டிராக்டர் பேரணிக்கென தனியாக பாதை ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு மேல்தான் பேரணி தொடங்கவும் விவசாயிகளுக்கு போலீஸார் அனுமதி அளித்திருந்தார்கள்.

இன்று காலை முதலே திக்ரி, காஜிப்பூர், சிங்கு எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக டெல்லி நோக்கி வரத் தொடங்கினர். திக்ரி எல்லையில் போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகளில் ஒருதரப்பினர் செல்ல முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆனால், அதையும் மீறி விவசாயிகள் டெல்லி நகருக்குள் சென்றனர். அதேபோல, முபாரக் சவுக் பகுதியில் விவசாயிகள் ஏராளமானோர் கூடினர்.

அங்கு போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து, போலீஸார் வாகனங்களில் மீது ஏறிச் செல்ல முயன்றனர். இதைத் தடுக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டபோது, விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசிக் கலைத்தனர்.

இதனிடையே டெல்லி அக்ஸர்தாம் கோயில் பகுதி, ஷாதாரா பகுதியில் உள்ள சிந்தாமணி சவுக் பகுதியில் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் சில கிலோ மீட்டர் பகுதியில் உள்ள டெல்லி ஐடிஓ பகுதிக்குள் விவசாயிகளில் ஒருதரப்பினர் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டினர். நாங்கோலி சவுக், முபாரக் சவுக் பகுதியில் போலீஸாரின் தடுப்புகளை உடைத்து, விவசாயிகள் நுழைந்தனர்.

மேலும், டெல்லி ஐடிஓ, போலீஸ் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் மீது விவசாயிகளில் ஒருதரப்பினர் கல்வீசித் தாக்குதல் நடத்தி, சேதப்படுத்தினர். விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதால், டெல்லியில் உள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

இதற்கிடையே டெல்லி போலீஸார் ஒதுக்கிய பாதையிலிருந்து விலகி மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதிக்குள் விவசாயிகளில் ஒருதரப்பினர் நுழைந்தனர். இதனால், போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் விவசாயிகளில் ஒரு பிரிவினர், டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். அங்கு உள்ளே சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையின் உயரத்தில் உள்ள கோபுரத்தில் தங்கள் கொடியை ஏற்றினர்.

சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றும் பகுதியில் விவசாயிகளின் கொடி ஏற்றப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமாகக் காணப்படுகிறது.

டெல்லியில் விவசாயிகளின் பேரணியில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டுவருவதால், டெல்லி போலீஸார் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தை ரத்து செய்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x