Last Updated : 26 Jan, 2021 01:10 PM

 

Published : 26 Jan 2021 01:10 PM
Last Updated : 26 Jan 2021 01:10 PM

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 28-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம்: மேற்கு வங்க அரசு முடிவு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: கோப்புப் படம்.

கொல்கத்தா

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 28-ம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கச் சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்புக் கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வந்து இரண்டரை மணி நேரம் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இதுவரை பாஜக ஆளாத மாநிலங்களான பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா, டெல்லி, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன. இப்போது மேற்கு வங்கமும் கொண்டுவர உள்ளது.

இதனிடையே சபாநாயகர் பிமான் பானர்ஜி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறப்புக் கூட்டத்தொடரை 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும். சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தப்படும்.

விதி 185-ன் கீழ் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர உள்ளோம். ஒரே விவகாரத்தில் 2 தீர்மானங்களை, இரு விதிகளின் கீழ் கொண்டுவருவதால் என்ன பயன்? ஒரு தீர்மானத்தை அரசு தாக்கல் செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு விஷயத்துக்காக விதி 169, 185 போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது” எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அப்துல் மணன் கூறுகையில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைப் போன்றே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்க அரசு இயற்றிவிட்டு, இப்போது மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற தார்மீக உரிமை இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றிய வேளாண் சட்டங்கள் தன்மை (ஷரத்துகள்) கொண்ட சட்டங்களைத் திரும்பப் பெற்று தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றலாம். இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரும்போது, அதில் விவாதிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆலோசித்து வருகின்றன.

அதேமயம், வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x