Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

பொருளாதார வளம், சமூக முன்னேற்றம் காண உறுதியேற்போம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் குடியரசு தின வாழ்த்து

நாட்டின் 72-வது குடியரசு தினம்இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: நம் நாடு 72-வது குடியரசு தினவிழாவை கொண்டாடும் இவ்வேளையில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள். நாட்டின்அடித்தளமாக விளங்கும் சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம், அனைவருக்கும் நீதி ஆகிய லட்சியங்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டம் மீதான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிபடுத்திக் கொள்வோம். வலிமை, அமைதி, பொருளாதார வளம், சமூக முன்னேற்றம், கலாச்சார துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள், நம் நாடு அனைத்திலும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று கனவு கண்டார்களோ அந்தக் கனவை நனவாக்கியவர் பிரதமர் மோடி. அவரின் பக்கபலத்தோடு விஞ்ஞானிகள், கரோனாதடுப்பூசி கண்டுபிடித்த பெருமையோடு, நம் நாட்டுக்காக மட்டுமல்லாமல் மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை கொடுக்கும் அளவுக்கு மிகப் பலம் பொருந்திய நாடாக இந்திய குடியரசு விளங்குகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின் கண்கவர் அணிவகுப்பை பார்த்து ரசித்து வந்த மக்களுக்கு, இந்த ஆண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்துகிற டிராக்டர் பேரணியை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஜனநாயகத்தின் வழிநின்று தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை தருகிற மாற்றங்களை நிகழ்த்துவோம்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு: நாம் எதைச் செய்தாலும் அந்த செயலால் நாட்டுக்கு நல்லதுமட்டுமே நடக்க வேண்டும் என்றஉணர்வுடன் அனைவரும் செயல்புரிய வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு நலமுடன் வாழவும், நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் 72-வது குடியரசு தினம் வழிவகுக்கும்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: அரசியல் சாசனம் மக்களுக்கு அளித்துள்ள அனைத்துஉரிமைகளையும் பாதுகாத்திட இந்நாளில் உறுதி மேற்கொள்வோம். மாநில உரிமைகளைப் பாதுகாத்திட எழுச்சி கொள்வோம்.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி: வெறுப்புஅரசியல், சாதி, மத வெறி, வன்முறை, சுரண்டல் ஆகியவற்றுக்காக எதிராக போராட உறுதியேற்க வேண்டும். அமைதியும், ஒற்றுமையும் கொண்ட தேசத்தை கட்டமைத்து, ஜனநாயகம் செழித்திட நாம் அனைவரும் பாடுபடுவோம்.

சமக தலைவர் சரத்குமார்: மக்களாட்சி தத்துவம் உணர்த்தும் இறையாண்மை, பொதுநலக் கோட்பாடு, சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை அடைவதில் உறுதுணையாக செயல்படும் அதேசமயம் அனைவருக்குமான சமநீதி கிடைக்கச் செய்வதும் நம் கடமை.

கொமதேக பொதுச்செயலாளர் ஈஆர்.ஈஸ்வரன்: மக்களாட்சி என்பது பெயரளவில் மட்டும் இல்லாமல் முழுமையாக மக்களுக்காக இருக்க வேண்டுமென்ற வகையில் ஆட்சியாளர்கள் செயல்பட முன்வரவேண்டும்.

ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: நாட்டின் ஜனநாயக மாண்புகள் எந்த விதத்திலும் குறையாமல் காக்கின்ற கடமையை குடிமக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா: வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடித்தளத்துக்கு குந்தகம் ஏற்படுத்த நினைப்பவர்களை வீழ்த்த இந்நன்னாளில் சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரும் குடியரசு தின வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x