Published : 25 Jan 2021 07:35 AM
Last Updated : 25 Jan 2021 07:35 AM

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி: வழித்தடங்கள், நிபந்தனைகளை அறிவித்தது காவல்துறை

புதுடெல்லி

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு வழித்தடங்களை போலீஸார் அறிவித்துள்ளனர். இந்த பேரணியில் 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் 60-வது நாளை எட்டியுள்ளது. விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இத
னால், போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன் ஒருபகுதியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர்
பேரணி நடத்த விவசாய சங்கங்கள்திட்டமிட்டன. இந்த பேரணிக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இது சட்டம், ஒழுங்கு பிரச்சினை என்பதால் இதில் டெல்லி காவல்துறைதான் முடிவெடுக்க வேண்டும். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. பேரணி தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது’ என கூறியது.

இந்நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் இரவு அனுமதி அளித்தனர். அதேநேரத்தில் பேரணிக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னரே பேரணியை தொடங்க வேண்டும். காஜிப்பூர், சிங்கு, சில்லா, டிக்ரி எல்லை வழியாகவே டெல்லிக்குள் நுழைய வேண்டும். மத்திய டெல்லி
பகுதிக்குள் பேரணி நடத்தக் கூடாதுஎன்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் ஜமூரி கிசான் சபாவின் பொதுச் செயலர் குல்வந்த் சிங் சாந்து கூறும்போது, ‘‘பேரணியில் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்க உள்ளன. அமைதியான முறையில்பேரணி நடைபெறும். பேரணியில்பங்கேற்போருக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

பாகிஸ்தான் சதி

இதனிடையே, பேரணியை சீர்குலைக்க பாகிஸ்தான் சதி செய்வதாக டெல்லி போலீஸ் கமிஷனர் தீபேந்திர பதக் (சிறப்பு புலனாய்வு) தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

பேரணியை சீர்குலைக்கும் பொருட்டு சமூக வலைதளமான ட்விட்டரில் டிராக்டர் பேரணி தொடர்பாக தவறான செய்திகளை பரப்புவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் சதி செய்கின்றனர். ஏற்கெனவே டிராக்டர் பேரணி தொடர்பாக ட்விட்டரில் தவறான செய்திகளை அவர்கள் பரப்பினர். அது பாகிஸ்தானில் இருந்துதான் வந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

பேரணிக்கான வழித்தடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. டிராக்டர் பேரணி டிக்ரி, சிங்கு, காஜிப்பூர் வழியாக டெல்லிக்குள் நுழையும். சிங்குவில் இருந்து கன்ஜாவாலா, பவானா, அவுசான்டி எல்லை, கேஎம்பி எக்ஸ்பிரஸ் வேவழியாக சென்று மீண்டும் சிங்
குவை வந்தடையும். அதேபோல, டிக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ, நஜாப்கர், மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் டிக்ரியை அடையும்.

காஜிப்பூர் எல்லையில் இருந்து பேரணி புறப்பட்டு குன்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் காஜிப்பூரை அடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணியையொட்டி டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உ.பி.யில் டீசல் வழங்க தடை

டெல்லியில் விவசாயிகள் நாளை பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் டிராக்டர்
களுக்கு டீசல் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் இருந்து விவசாயிகள் டிராக்டரில் டெல்லிக்கு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கையில் உ.பி. மாநில அரசு ஈடுபட்டுள்
ளது. அதன்படி, டிராக்டர்களுக்கு டீசல் வழங்கக் கூடாது என்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விநியோக அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் வெளியான நிலையில், உ.பி.யைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத், ‘‘விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் பெருநகரங்களிலும், நகரங்களிலும் சாலை மறியலில் ஈடுபட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், உ.பி.யில் பரபரப்பு நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x