

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, உத்தரா கண்டின் ஒரு நாள் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி நேற்று செயல்பட்டார்.
தமிழில் வெளிவந்த ‘முதல்வன்' திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்று திறம்பட செயல்படுவார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படம் நாயக் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்கும் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் வருவது போலவே, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தராகண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோஸ்வாமி நேற்று செயல்பட்டார். ரூர்கியில் உள்ள பிஎஸ்எம் பிஜி கல்லூரியில் சிருஷ்டி கோஸ்வாமி பிஎஸ்சி (வேளாண்மை) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
உத்தராகண்டின் கோடைகால தலைநகரான கர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து அவர் பணியாற்றினார். இதற்கு அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்தார்.
முதல்வர் பொறுப்பேற்ற சிருஷ்டி, அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். 2018-ம்ஆண்டு முதல் உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான சட்டப் பேரவையில் சிருஷ்டிதான் முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.