Last Updated : 25 Jan, 2021 03:14 AM

 

Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

அயோத்தி ராமர் கோயிலில் ராவணனுக்கும் சிலை வைக்க வேண்டும்: மதுராவின் லங்கேஷ் பக்த் மண்டல் வலியுறுத்தல்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ராவணனுக்கும் சிலை வைக்க வேண்டும் என மதுராவின் லங்கேஷ் பக்த் மண்டல் வலியுறுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் ராமர் மீது அதிக பக்தி கொண்டவர்கள், ராவணனை விரும்புவதில்லை. இதற்கு, ராமாயணத்தின் நாயகர்ராமனின் மனைவியான சீதாவை கடத்தியதால் அவருக்கு ராவணன்எதிரியானது காரணம். இதனால், அரக்கனாக பாவிக்கப்படும் ராவணன் விஜயதசமி அன்று ராமனால் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, தசரா பண்டிகையின் இறுதி நாளான விஜயதசமி அன்று ராவணனின் கொடும்பாவியை எரித்து வட இந்தியர்கள் மகிழ்கின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ராவணனுக்கும் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுராவின் லங்கேஷ் பக்த் மண்டல் எனும் ராவணர் வழி வந்தவர்களாகக் கருதப்படும் சாரஸ்வத் எனும் பிராமணசமூகத்தினர் இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் லங்கேஷ் பக்த் மண்டலின் தலைவர் ஓம்வீர் சாரஸ்வத் கூறும்போது, "ராவணன் இல்லையேல் ராமாயணம் பக்திகாவியமாகி இருக்காது. கடவுள்ராமருக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தாலும் ராவணனுக்கும் அதில் பங்கு உண்டு. எனவே, வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும் ராமர் கோயிலில் ராவணனுக்கும் சிலை அமைத்து வணங்க அனுமதிப்பது அவசியமாகும். இதற்காக அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளோம்" என்றார்.

வட மாநிலங்களில் பல பகுதிகளில் வாழும் சாரஸ்வத் சமூகத்தினர் தசராவில் ராவணன் கொடும்பாவியை எரிப்பதில்லை. இவர்கள் ராவணனை வணங்கு வதால், மற்ற பிராமணர் சமூகத் தினர் சாரஸ்வத்தினருடன் திருமணஉறவுகளும் வைப்பதில்லை. சாரஸ்வத் சமூகத்தினரால் ராவணனுக்காக கோயில்கள் எழுப்ப பல முறை முயற்சிக்கப்பட்டது.

இதற்கு இந்து அமைப்புகள் அளிக்கும் எதிர்ப்பின் காரணமாக அதை செய்ய முடியாமல் உள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் மட்டும் விஷ்வ இந்து பரிஷத்தின் எதிர்ப்பை மீறி ராவணன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டியதாயிற்று.

உ.பி.யின் கவுதம்புத் நகர் மாவட்டம் கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் தாம் கிராமத்திலும் ஒரு முயற்சி நடைபெற்றது. இங்குள்ள ராதா கிருஷ்ணா கோயில் வளாகத்தில் அப்பகுதிவாசிகளால் ராவணனுக்கு கடந்த ஆகஸ்ட் 2016-ல் ராவணனுக்கு ஒரு சிலை வைக்கப்பட்டது.

அதேநாள் இரவில் கோயிலி னுள் புகுந்த சிலர் அதன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராவணன் சிலையை உடைத்து அங்கிருந்து அகற்றி விட்டனர். இதற்கு முன்பாக ஆக்ராவிலும் எடுத்த முயற்சியால் ராவணனுக்கு கோயில் கட்டப்படாமல் போனது.

கடந்த வருடம் ஆகஸ்ட் 9-ல் அயோத்தியில் ராமர் கோயிலுக்கானப் பூமி பூஜை விழா நடைபெற்றது. அப்போது, ‘தமிழ் அரசர் ராவணன்’ என ட்விட்டரில் டிரெண்டாகி ஆதரவு கருத்துகள் பதிவானதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x