Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

எல்லா மதங்களையும் மதித்தவர் நேதாஜி: ட்விட்டரில் மகள் அனிதா புகழாரம்

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாப்பட்டது. இதையொட்டி, ஜெர்மனியில் வசிக்கும் அவரது மகள் அனிதா போஸ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது;

நேதாஜி ஒரு சமய நம்பிக்கை உள்ள பக்திமிக்க இந்துவாக இருந்தார். எனினும், எல்லா மத நம்பிக்கைகளுக்கும் அவர் மதிப்பளித்தார். அத்துடன் பிற மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டுமென தன்னை பின்பற்றுவோர், இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை ஊக்குவித்தார். ஒற்றுமை, சகிப்புத்தன்மையை தனது லட்சியமாகக் கொண்டிருந்த நேதாஜி, தனது வாழ்நாள் முழுவதும் அவற்றைக் கடைபிடித்தார். அறிவொளி வீசும் நவீன இந்தியா உருவாக வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அதேநேரம், தனது வரலாற்று வேர்கள், தத்துவங்கள், மத கலாச்சார பாரம்பரியங்களில் இந்தியா உறுதியாக நிற்க வேண்டும் என்று விரும்பினார். நேதாஜியின் கொள்கைகள், லட்சியங்களில் இருந்து நாம் உத்வேகம் பெறுவோம். இவ்வாறு அனிதா போஸ் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் நேதாஜியின் பேத்தியுமான சுகதா போஸ் கூறும்போது, ‘‘நேதாஜியின் பிறந்த நாளில் குறிப்பிட்ட ஒரு பெயரில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட, சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களையும் ஒருங்கிணைத்து நேதாஜி, காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி அவர்கள் வழி நடப்பது முக்கியம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x