

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு முதலாம் உலகப்போர் குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
முதலாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்துக்காக பிரான்ஸில் பணியாற்றிய இந்திய வீரர்கள் அனுப்பிய கடிதங்களை தொகுத்து டேவிட் ஒமிஸி என்பவர், `உலகப் போரில் இந்தியாவின் குரல்’ என்ற புத்தகத்தை எழுதியுள் ளார். அந்த புத்தகத்தை டேவிட் கேமரூனுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
மேலும் புத்தகங்களை வைப்பதற்கான 2 சிறிய அலமாரிகளை கேமரூனுக்கு மோடி பரிசளித்தார். கைவேலைப்பாடுகள் நிறைந்த அந்த அலமாரிகள் மரம், மார்பிள், வெள்ளி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வெள்ளி மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அந்த மணிகளில் பகவத் கீதையின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கேமரூனின் மனைவி சமந்தாவுக்கு கேரளாவில் தயாரிக்கப்பட்ட கைவேலைப்பாடுகள் நிறைந்த சங்கு வடிவ கண்ணாடி மற்றும் சால்வைகளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
முன்னதாக நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் மோடிக்கு டேவிட் கேமரூன் இரவு விருந்து அளித்தார். இதில் காளாண் உணவு வகைகள் மற்றும் இந்தியா, பிரிட்டனில் மிகவும் பிரபலமான சைவ உணவு வகைகள் இடம் பெற்றன.
இந்த விருந்தின்போது இரு தலைவர்களும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.