Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

ஆந்திர கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தி மாணவர்களுடன் பயணித்த மாவட்ட ஆட்சியர்

பஸ் வசதி இல்லாத கிராமத்துக்கு பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்து, மாணவ, மாணவிகளுடன் அதே பஸ்சில் பயணித்த மாவட்ட ஆட்சியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், கொஞ்சிரெட்டி பள்ளி கிராமத்தில் இருந்து பிரம்ம சமுத்திரம் வரை சுமார் 7 கி.மீ. தூரம் வரை பஸ் வசதி இல்லாத காரணத்தால், அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் நடந்தே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நிலை இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலரிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. வழக்கம் போல் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் கந்தம் சந்துருடுவிடமும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சமீபத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆனால், மாவட்ட ஆட்சியர் சந்துருடு மற்றவர்கள் போல் இன்றி, உடனடியாக கொஞ்சிரெட்டி பள்ளி கிராமத்துக்கு பஸ் ஏற்பாடு செய்தார். இது நேற்று முதல் இயக்கப்பட்டதால், இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுடன் உரையாடியபடியே மாவட்ட ஆட்சியரும் அரசு பஸ்சில் சிறிது தூரம் வரை பயணம் செய்தார்.

சமூக வலைதளங்களில் இந்தப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x