Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

காதலி வீட்டில் பிடிபட்ட இளைஞர் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம்

யாருக்கும் தெரியாமல் காதலியின் வீட்டுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்டதால், அவமானமுற்ற இளைஞர் ஒருவர் பாகிஸ்தானுக்கு தப்பியோடிய சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ளது சஜ்ஜன் கா பார் கிராமம். பாகிஸ்தானுக்கு மிக அருகே அமைந்திருக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெமாரா ராம் மேக்வால் (24). இவரும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் 4-ம் தேதி இரவு, யாருக்கும் தெரியாமல் தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு ராம் மேக்வால் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் அவர் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக ராம் மேக்வாலின் பெற்றோரிடம் தாங்கள் கூறப்போவதாக அப்பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். அவர்களிடம் மேக்வால் பல முறை மன்னிப்பு கோரியும் அவர்கள் மனம் மாறவில்லை.

இந்த விஷயம் தனது பெற்றோருக்கு தெரிந்தால் அவமானமாகி விடுமே என அஞ்சிய அவர், பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்வது என முடிவெடுத்தார். அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவே இந்திய எல்லையை ராம் மேக்வால் கடந்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்ட அவரது பெற்றோர், தங்கள் மகன் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பாகிஸ்தானில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்கு அவர் சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) தொடர்பு கொண்ட ராஜஸ்தான் போலீஸார், இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளனர். இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ராம் மேக்வால் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற போது அந்நாட்டு எல்லை காவல் படையிடம் பிடிபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ராம் மேக்வாலை விடுவிக்கும்படி பாகிஸ்தான் ரேஞ்சர் படையிடம் பிஎஸ்எப் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

காதல் விவகாரத்தில் பெற்றோருக்கு பயந்து பாகிஸ்தானுக்கு இளைஞர் தப்பியோடிய சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x