Published : 22 Jan 2021 06:30 PM
Last Updated : 22 Jan 2021 06:30 PM

''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய எம்எல்ஏவின் உருவபொம்மை எரிப்பு: தெலங்கானாவில் பஜ்ரங் தள தொண்டர்கள் கைது

பஜ்ரங் தளத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் காட்சி | படம்: ஏஎன்ஐ.

''ராமர் கோயிலுக்கு யாரும் நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய எம்எல்ஏவுக்கு எதிராக தெலங்கானாவில் ஆர்ப்பாட்டம் நடத்தி அவரது உருவ பொம்மைகளை எரித்த பஜ்ரங் தள தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராம ஜென்மபூமி-பாபர் மஸ்ஜித் வழக்கில் 2019 நவம்பர் 9 ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

கடந்த வெள்ளியன்று ராமர் கோயில் கட்ட நன்கொடைகள் ஏற்கப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்திருந்தது. இதனையொட்டி ஏராளமானோர் நன்கொடைகளை அளித்தனர். குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.11 கோடி நன்கொடை அளித்தார். மூன்றே நாட்களில் ரூ.100 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்திருந்தது.

இதனை விமர்சித்துப் பேசிய தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) எம்.எல்.ஏ., அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு மக்கள் யாரும் நன்கொடைகளை வழங்க வேண்டாம் என்று ஒரு வீடியோவில் பேசினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இது பஜ்ரங் தள தொண்டர்களைக் கோபமடையச் செய்துள்ளது.

வைரலான எம்எல்ஏ பேச்சு

கொருத்லா தொகுதியைச் சேர்ந்த டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ, கே.வித்யாசாகர் ராவ், வீடியோவில் கூறுகையில், "இப்போது அவர்கள் ராமர் கோயில் கட்டப் பணம் கேட்டுப் புதிய பணிகளைத் தொடங்கியுள்ளனர். நாம் நமது கிராமங்களில் ராமர் கோயில்களைக் கட்ட மாட்டோமா? உ.பி.யில் ராமர் கோயில் கட்டுவதென்பது அவர்களின் புதிய அவதாரம். அவர்கள் ராம பக்தர்களே தவிர, பக்தர்கள் அல்ல.

கிராமத்திற்கு யார் நன்கொடை கேட்டு வந்தாலும், 'நாங்கள் ராமர் கோயிலை எங்கள் கிராமத்திலேயே கட்டுவோம், உத்தரப் பிரதேசத்தில் அல்ல' என்று அவர்களிடம் சொல்லுங்கள். உ.பி.யில் கட்டும் ராமர் கோயிலுக்கு யாரும் நன்கொடைகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று பேசியிருந்தார்.

எம்எல்ஏ கூறுவதை ஏற்க முடியாது: பஜ்ரங் தளம் நகரத் தலைவர் முகேஷ் யாதவ்

இது விஸ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத் தொண்டர்களைக் கோபமடையச் செய்துள்ளது. இன்று அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய டிஆர்எஸ் எம்எல்ஏவுக்கு எதிராக ஹைதராபாத்தில் போராட்டம் நடத்தினர்.

அந்த எம்.எல்.ஏ.வை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு பஜ்ரங் தள உறுப்பினர் சுபாஷ் சந்தர் கோரி கோஷங்கள் எழுப்பினார். அவரது உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பஜ்ரங் தளம் நகரத் தலைவர் முகேஷ் யாதவ் ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''ராமர் கோயில் கட்டுவதற்கு யாரும் நன்கொடை வழங்கக் கூடாது என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ வித்யாசாகர் ராவ் கூறியதை ஏற்கமுடியாது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x