Last Updated : 22 Jan, 2021 02:52 PM

 

Published : 22 Jan 2021 02:52 PM
Last Updated : 22 Jan 2021 02:52 PM

கரோனாவால் யூபிஎஸ்சி தேர்வு எழுதும் கடைசி வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கரோனா வைரஸ் பரவல் காரணமாக யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல்போன கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூடுதலாக எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் முந்தைய வாதத்தின்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, கரோனா வைரஸால் யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல்போன, கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது எனத் தெரிவித்தார்.

ஆனால், இன்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.ராஜு, கடைசி வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி யூபிஎஸ்சி தேர்வு நடந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தேர்வு எழுதி வரவில்லை. பலர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தனர். கரோனா நோயாளிகளாகவும், கரோனா நோயிலிருந்து சிகிச்சை முடித்த நிலையில் இருந்ததாலும், போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை என்பதால், தேர்வு எழுத முடியவில்லை.

இதையடுத்து, யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல்போன கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டும எனக் கோரி தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “கரோனா வைரஸ் பரவல் காலத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் எங்களால் தேர்வு எழுத முடியவில்லை, தேர்வுக்குத் தயாராகவும் முடியவில்லை. தேர்வு எழுதுவதைத் தவறவிட்டவர்கள் பலர் கரோனா சிகிச்சைப் பணியில் இருந்தார்கள். அவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பத்தை அனுபவித்தனர்.

தேர்வுக்குத் தயாராக முறையான கட்டமைப்பு வசதிகளும் இல்லை. வருமானம் ஈட்டிக்கொண்டே தேர்வுக்குப் படித்த பலருக்கும் கரோனா காலத்தில் வேலையிழப்பு ஏற்பட்டு வாழ்க்கையை நடத்துவதே சிரமமானது.

ஆதலால், தேர்வு நடந்த நேரத்தில் தேர்வு எழுதுவதைவிட ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலத்தையும், உயிரையும் தற்காத்துக் கொள்வதற்கே முன்னுரிமை அளித்தார்கள். ஆதலால், மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும” எனக் கோரியிருந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின்போது மனுதாதரர்கள் சார்பில் தாக்கல் செய்த வாதத்தில், “தேர்வு எழுதத் தவறவிட்ட கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு வயதில் சலுகையும், மீண்டும் ஒரு வாய்ப்பும் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், “யூபிஎஸ்சி தேர்வு எழுதும் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவது குறித்து அரசு பரீசிலித்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். காவே, கிருஷ்ணா முரேரா அமர்வில் இன்று காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ ஆஜரானார்.

அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், “யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதைத் தவறவிட்ட கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. இதற்குரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை. மத்திய அரசிடம் இருந்து நேற்று இரவுதான் இதற்கான உத்தரவு எங்களுக்குக் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x