Last Updated : 22 Jan, 2021 01:49 PM

 

Published : 22 Jan 2021 01:49 PM
Last Updated : 22 Jan 2021 01:49 PM

விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்வற்றும், அகங்காரத்துடனும் மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது: சோனியா காந்தி தாக்கு

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் உணர்வற்றும், அகங்காரத்துடனும் நடந்துகொள்ளும் மத்திய அரசைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. காணொலி மூலம் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உள்ள நிர்வாகிகளான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நடக்க இருக்கும் உட்கட்சித் தேர்தல், விவசாயிகள் பிரச்சினை, பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் பேசியதாவது:

''வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். ஆனால், போராட்டம் குறித்து எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் அகங்காரத்துடன் நடந்துகொள்ளும் மத்திய அரசின் செயல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இதன் மூலம் வேளாண் சட்டங்கள் வெறுப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா குறித்து விவாதிக்கவும், அதன் தாக்கங்கள், பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கவும், பேசவும், உள்நோக்கத்துடன் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

வேளாண் சட்டங்கள் குறித்துத் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து வருகிறது. வேளாண் சட்டங்கள் உணவுப் பாதுகாப்பை அழித்துவிடும், குறைந்தபட்ச ஆதார விலை, பொதுக்கொள்முதல், ரேஷன் முறை ஆகிய 3 தூண்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும் என்பதால், நாம் தொடக்கத்தில் இருந்தே புறக்கணித்தோம்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமாக விவாதிக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. பேசவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், மத்திய அரசு அந்த விவகாரங்களை விவாதிக்கவிடுமா, அனுமதியளிக்குமா என்பதுதான் பிரச்சினை.

வாட்ஸ் அப்பில் அர்னாப் கோஸ்வாமிக்கும், டிஆர்பி நிறுவனத்துக்கும் இடையிலான உரையாடல் குறித்து சமீபத்தில் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தேன். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நாட்டின் தேசப் பாதுகாப்பு எவ்வாறெல்லாம் சமரசம் செய்யப்படுகிறது என்பது வருத்தத்திற்குரியது.

இந்த விவகாரம் வெளியான பின்பும், மத்திய அரசு தனக்கு ஏதும் தெரியாததுபோல் அமைதியாக இருந்து வருகிறது. மற்றவர்களின் தேச பக்திக்கும், தேசியவாதத்துக்கும் சான்று அளித்தவர்கள் தற்போது நிற்கிறார்கள். அவர்கள் முழுமையாக தாங்கள் யாரென்று வெளிப்பட்டுவிட்டார்கள்.

கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும். முழுமையாக முடிக்கப்பட வேண்டும். இந்தக் கரோனா காலத்தில் ஏராளமான மக்கள் வெளியே தெரியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் காயம், ரணங்கள் ஆறுவதற்கு நீண்டகாலம் ஆகும்.

நாட்டின் பொருளாதாரச் சூழல் பெரும்பாலான இடங்களில் பாதிப்புடனே இருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் பாதிப்பு இன்னும் குறையவில்லை. அமைப்பு சாரா தொழில்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு மறுக்கிறது.

பொதுச் செலவினங்களைக் கவனமாக முன்னுரிமை அளித்துச் செலவிட வேண்டிய சூழல் இருக்கும்போது, மத்திய அரசு தன்னுடைய பெருமையையும், தோற்றத்தையும் உயர்த்தும் வகையான திட்டங்களுக்கு மிகப்பெரிய அளவில் செலவிடுவது வேதனையாக இருக்கிறது''.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x