Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. அதன்படி, நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் 23-ம் தேதி (நாளை) நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடிகலந்து கொண்டு பேசுகிறார். நேதாஜி பற்றிய நிரந்தர கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். நேதாஜியின் நினைவாக நாணயத்தையும் தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முன்னதாக, கொல்கத்தா தேசிய நூலகத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு நேதாஜி பற்றிய சர்வதேச கருத்தரங்கு நடக்கிறது. அதில் பங்கு பெறுவோர் மற்றும் கலைஞர்களுடன் மோடி கலந்துரையாடுகிறார்.
மேற்குவங்கம் செல்வதற்கு முன்னதாக நாளை காலை அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். சிவசாகரில் நடக்கும் நிகழ்ச்சியில் 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை நிலமற்றமக்களுக்கு மோடி வழங்குகிறார். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT