Last Updated : 21 Jan, 2021 12:35 PM

 

Published : 21 Jan 2021 12:35 PM
Last Updated : 21 Jan 2021 12:35 PM

இதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பின்னடைவாக அந்தகட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

நாதியா மாவட்டத்தில் சாந்திபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா , பாஜக தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியி்டடு பட்டாச்சார்யா வெற்றி பெற்றார். ஆனால், அடுத்த ஆண்டே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். தற்போது, பாஜகவில் பட்டாச்சார்யா இணைந்துள்ளார்.

எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்த காட்சி

பாஜகவில் இணைந்தபின் பட்டாச்சார்யா கூறுகையில் “ மம்தா பானர்ஜி ஆட்சியில் இளைஞர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவி்ல்லை, தொழிற்சாலைகள் வரவில்லை. தற்போது மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டம்தான் தேவை. என்னுடைய தொகுதியில்கூட என்னை பணி செய்யவிடாமல் ஆளும்கட்சியினர் தடுக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

கடந்த மாதம் மிட்னாபூருக்கு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா வந்திருந்தார். அமித் ஷா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 34 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில் ஒரு எம்.பி. 7 எம்எல்ஏக்கள் அடங்கும். தற்போது 8-வதாக ஒரு எம்எல்ஏ பாஜகவில் இணைந்துள்ளார்.

இதுவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி., இடதுசாரி கட்சிையச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்தது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சவுகதா ராய் கூறுகையில் “ பட்டாச்சார்யா திரிணமூல் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகியது நல்லதுதான். இவரைப் போன்றோர் கட்சியைவிட்டு செல்வதுதான் எங்களுக்கு நல்லது. காங்கிரஸிலிருந்து திரிணமூல் காங்கிரஸுக்கு பட்டாச்சார்யா வந்தார். இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதுதான் அவரின் உண்மையான நிறம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x