Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறைப்பு: ஒடிசா அரசு அறிவிப்பு

புவனேஸ்வர்

ஒடிசாவில் தனியார் பள்ளிகளில்கல்விக் கட்டணம் குறைக்கப்படுவ தாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் 2020 -2021-ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் குறைக்கப்படுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.6,000 வசூலிக்கும் பள்ளிகளில் கட்டண குறைப்பு இல்லை. ரூ.6,001 முதல் ரூ.12,000 வரை வசூலிக்கும் பள்ளிகளில் கல்விக் கட்டணம் 7.5 சதவீதம் குறைக்கப்படும். ஆண்டுக்கு ரூ.12,001 முதல் ரூ.24,000 வரை வசூலிக்கும் பள்ளிகளில் 12 சதவீதமும், ரூ.24,001 முதல் ரூ.48,000 வரை கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் 15 சதவீதமும் கட்டணக் குறைப்பு இருக்கும்.

இதேபோல, ரூ.48,001 முதல் ரூ.72,000 வரை 20 சதவீதமும் ரூ.72,001 முதல் ரூ.1 லட்சம் வரை 25 சதவீதமும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் 26 சதவீதமும் கட்டணக் குறைப்பு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து மற்றும் உணவுக்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் விடுதிக் கட்டணத்தில் 30 சதவீதம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கட்டணத்தை குறைக்க அரசும் தனியார் பள்ளிகளும் மறுத்த நிலையில் பல்வேறு பெற்றோர் சங்கங்கள் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் முறை யிட்டன.

கல்விக் கட்டணத்தை குறைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கட்டணக் குறைப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற உத்தரவை தனியார் பள்ளிகள் பின்பற்றும் என்று நம்புவதாக பள்ளி மற்றும் மக்கள் கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஆர். தாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x