Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

மகனை முதல்வராக்க சந்திரசேகர ராவ் திட்டம்?- தெலங்கானா அரசியலில் புதிய திருப்பம்

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தனது மகனை முதல்வர் பதவியில் அமர வைத்துவிட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா முதல்வராக கே. சந்திரசேகர ராவ் உள்ளார்.இவர் தனது மகனும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே.டி. ராமாராவுக்கு தனது முதல்வர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே தனது மகனான கே.டி. ராமாராவுக்கு கட்சிப் பொறுப்பை வழங்கினார் சந்திரசேகர ராவ். அப்போதிலிருந்து அனைத்து கட்சி பொறுப்புகளையும் ராமாராவே கவனித்து வருகிறார். வயதில் மூத்தவர்களான ஈடல ராஜேந்தர் உள்ளிட்டோரும் ராமாராவ் முதல்வர் பொறுப்பை ஏற்பதை வரவேற்றுள்ளனர்.

முதல்வர் சந்திரசேகர ராவின் அக்கா மகனான ஹரீஷ் ராவும் டிஆர்எஸ் கட்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரும் தற்போது அமைச்சராக உள்ளார். இதேபோன்று சந்திரசேகர ராவின் மகளான கவிதா தற்போது மேலவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இதற்கு முன் இவர் எம்பியாக இருந்தார். கடந்த தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் எம்.பி. பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றார். இது டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின்னர்தான் இவருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

அரசியலில் தனது குடும்பத்தாருக்கு பதவிகள் வழங்கி யிருப்பது சந்திரசேகர ராவ் மீது பலரின் குற்றச்சாட்டுகளுக்கு காரணமானது. சமீபத்தில் துப்பாக்கா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இது டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதனை தொடர்ந்து ஹைத ராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 44 வார்டுகளில் வெற்றி பெற்று 2-வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது சந்திர சேகரராவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x