Published : 21 Jan 2021 07:07 AM
Last Updated : 21 Jan 2021 07:07 AM

வேளாண் சட்டங்களை 18 மாதம் நிறுத்திவைக்க தயார்: 10-ம் சுற்று பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசு உறுதி

புதிய வேளாண் சட்டங்களை 18 மாதங் களுக்கு நிறுத்திவைக்க தயாராக இருப்ப தாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்காததால் 10-ம் சுற்று பேச்சுவார்த்தை யிலும் முடிவு எட்டப்படவில்லை.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும், போராட்டத்தை கைவிட விவசாயிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே 10-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று மதியம் 2.45 மணிக்கு தொடங்கியது. மத்திய அமைச் சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை 12 முதல் 18 மாதங்கள் வரை நிறுத்திவைக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கள் உறுதி அளித்தனர். இதை ஏற்காத விவசாயிகள், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனால், 10-வது சுற்று பேச்சுவார்த் தையும் சுமுக முடிவு எட்டப்படாமலேயே நிறைவடைந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை (22-ம் தேதி) நடக்கும் என மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

டிராக்டர் பேரணிக்கு தடை இல்லை

இதனிடையே, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘விவசாயிகள் பேரணிக்கு அனுமதி கொடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து டெல்லி காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான முழு அதிகாரம் காவல் துறையிடம் உள்ளது.

இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடுவது முறையாக இருக்காது. டிராக்டர் பேரணிக்கு எதிரான மனு தொடர்பாக எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதேநேரம், மனுவை கிடப்பில் போடவும் இயலாது. வேண்டுமெனில், இந்த மனுவை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளலாம்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x