Last Updated : 20 Jan, 2021 03:10 PM

 

Published : 20 Jan 2021 03:10 PM
Last Updated : 20 Jan 2021 03:10 PM

பனிமூட்டம் காரணமாக கோர விபத்து;  திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்த 14 பேர் பலி

மேற்கு வங்கத்தில் கார் மீது லாரி மோதியதில் திருமணத்திற்கு சென்ற 14 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று இரவு நடந்துள்ள இந்த கோர விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

துப்குரி வட்டாரத்தில் உள்ள ஜல்தகா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. துப்குரியை நோக்கி நேற்று இரவு திருமண நிகழ்ச்சிக்கு சில கார்கள் சாலையில் எதிர் பாதையில் சென்றுகொண்டிருந்தன. எதிரே கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகள் மீது மோதி பலத்த விபத்துக்குள்ளாகியது.

இதில் சம்பவ இடத்திலேயே நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்த கோர விபத்து நடந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 10 பேரும் ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி இரங்கல்

புருலியாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி கூறுகையில், "சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது, ஆனால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் துணை நிற்கும். இறந்தவரின் உறவினர்களுக்கும் காயமடைந்த நபர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

எங்கள் உள்ளூர் எம்எல்ஏ சவுரவ் சக்ரவர்த்தி ஏற்கெனவே விபத்து நடந்த பகுதியில் பார்வையிட்டு வருகிறார், மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருக்கிறார், இந்த விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ .2.5 லட்சம,. பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ .50,000 மற்றும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ .25,000 இழப்பீடு வழங்கப்படும்'' என்று அறிவித்தார்.

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி சாலை விபத்து குறித்து மிகுந்த வேதனையடைந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ .50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x