Last Updated : 20 Jan, 2021 01:46 PM

 

Published : 20 Jan 2021 01:46 PM
Last Updated : 20 Jan 2021 01:46 PM

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: மத்திய அரசின் மனு வாபஸ்

கோப்புப்படம்

புதுடெல்லி

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட உள்ள டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, தடை கோரி தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெற உள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து, விவசாயிகள், மத்திய அரசு இடையே நிலவும் சிக்கலைத் தீர்க்க சமரசக் குழுவையும் நியமித்துள்ளது.

இந்தச் சூழலில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று, அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசு சார்பில் டெல்லி காவல்துறை மூலம் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், எல்.என்.ராவ், வினீத் சரண் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின்போது தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, “டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நுழைவது என்பது டெல்லி காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு விவகாரம். இதை போலீஸார்தான் தீர்மானிக்க வேண்டும்.

டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது போலீஸார். அவர்கள்தான் முதல் அதிகாரம் படைத்தவர்கள். நீதிமன்றம் அல்ல. போலீஸ் அதிகாரிகள் குறித்து நாங்கள் ஏதும் கூறமாட்டோம். இதைத் தீர்மானிக்க வேண்டிய அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் இன்று இந்த மனு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அப்போது, தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம், “டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை அனுமதிப்பதில் முடிவு எடுக்க வேண்டியது டெல்லி போலீஸார்தான். இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம். இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது.

இது முழுமையாக போலீஸார் தொடர்புடைய விவகாரம். ஆதலால், நீங்கள் உங்கள் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கிறோம். டெல்லி போலீஸாருக்குதான் இதில் அதிகாரம் இருப்பதால், அவர்கள்தான் இதைக் கையாள வேண்டும். உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் உங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க இயலாது” எனத் தெரிவித்தது.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் டெல்லி போலீஸார் தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x