Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார்: பெங்களூரு சிறை அதிகாரி தகவல்

பெங்களூரு

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து, வரும் 27-ம் தேதி காலை விடுதலை செய்யப்படுவார் என சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரின் தண்டனை காலமும் நிறைவ‌டைய உள்ள நிலையில், சசிகலாவும் இளவரசியும் கடந்தநவம்பரில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர். சுதாகரன் இன்னும் சில தினங்களில் அபராதத்தை செலுத்த உள்ளார்.

இதனிடையே சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கடந்த மாதம் சசிகலா அபராதம் செலுத்தியதற்கான நீதிமன்ற ஆவணங்களை சிறை கண்காணிப்பாளரிடம் தாக்கல் செய்தார். மேலும் அவரை விடுதலை செய்யும் தேதி குறித்து முன்கூட்டியே தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையின் தகவல் தொடர்புஅதிகாரி லதா நேற்று ராஜா செந்தூர் பாண்டியனுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,"சசிகலா உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அபராதத்தை செலுத்தி, 4 ஆண்டு சிறை தண்டனையையும் நிறைவு செய்துள்ள‌தால் ஜனவரி27-ம் தேதி காலையில் விடுதலைசெய்யப்படுவார்'' என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x