

குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் இன்று அதிகாலை சரக்கு லாரி ஒன்று, கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது.
லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி சென்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியது. இதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்துள்ளனர்கள். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்த தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுபோலவே உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் அறிவித்துள்ளார்.