Published : 30 Oct 2015 08:01 AM
Last Updated : 30 Oct 2015 08:01 AM
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும் குடகு மாவட்ட தொழிலதிபர் நானையாவின் மகள் ஸ்வாதிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த சில தினங்களில் கன்னட திரைப்பட நடிகை மைத்ரி கவுடா, கார்த்திக் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
இந்த வழக்கில் கார்த்திக் கவுடாவை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் கார்த்திக் கவுடா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதையடுத்து, நின்று போன மகனின் திருமணத்தை நடத்த சதானந்த கவுடா முடிவு செய்தார்.
இதற்கிடையே, வழக்கு முடியும் வரை கார்த்திக் கவுடா திருமணம் செய்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மைத்ரி கவுடா கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிமன்றம் இதை ஏற்க மறுத்துவிட்டது.
எனவே கார்த்திக் கவுடாவுக்கும் ஸ்வாதிக்கும் குடகு மாவட்டத்தில் உள்ள குஷால் நகரில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பாஜக முக்கிய தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் உட்பட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த திருமண விருந்தில் குடகு மாவட்ட பாரம் பரியத்தின்படி பன்றி கறி விருந்து பரிமாறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT