Last Updated : 18 Jan, 2021 01:20 PM

 

Published : 18 Jan 2021 01:20 PM
Last Updated : 18 Jan 2021 01:20 PM

ராமர் கோயில் கட்டுவதற்கு நான் நன்கொடை அளித்துவிட்டேன்; நீங்களும் அளிக்க வேண்டும்: ரசிகர்களுக்கு அக்‌ஷய் குமார் வேண்டுகோள்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

மும்பை

ராமர் கோயில் கட்டுவதற்கு நான் நன்கொடை அளித்துவிட்டேன்; நீங்களும் அளிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நன்கொடை கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெறப்பட்டு வருகிறது. ராமர் கோயில் கட்ட அமைக்கப்பட்ட அறக்கட்டளையான ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இதில் குஜராத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ரூ.11 கோடி நன்கொடை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் அளித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"அயோத்தியில் நம்முடைய ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது பங்களிப்பு செய்வதற்கான நமது முறை இது.

நான் நன்கொடையை அளித்து அப்பணியைத் தொடங்கிவிட்டேன். நன்கொடை அளிப்பதில் நீங்களும் என்னுடன் சேர்ந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஜெய் ஸ்ரீராம்.

வரும் தலைமுறையினர் ராமரின் வாழ்க்கை, அவர் கடந்து வந்த பாதை, அவர் மக்களுக்கு அளித்துள்ள செய்தியைப் பின்பற்றி தொடர்ந்து உத்வேகம் பெற வேண்டும்''

இவ்வாறு அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

2020 தீபாவளியன்று அக்‌ஷய் குமார் தனது ‘ராம் சேது’ படத்தை அறிவித்தார். அபிஷேக் சர்மா இயக்கும் இப்படம், அன்றைய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடலில் ராமர் கட்டிய சேது பாலத்தின் கதையை விவரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அக்‌ஷய் குமார் கடந்த மாதம் மும்பை விஜயத்தின்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து "ராம் சேது" படம் பற்றி விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x