Last Updated : 18 Jan, 2021 11:47 AM

 

Published : 18 Jan 2021 11:47 AM
Last Updated : 18 Jan 2021 11:47 AM

கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட உ.பி. அரசு மருத்துவமனை பணியாளர் மர்மச்சாவு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனை பணியாளர் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை கரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டவர்.

உ.பி.யின் மேற்குப்பகுதியில் உத்தராகண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ளது முராதாபாத். இதன் அரசு பொது மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றுகிறார் மஹிபால் சிங் (48),

நேற்று தனது வீட்டில் ஓய்வில் இருந்தவருக்கு மதியம் திடீர் என மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நெஞ்சுவலியும் ஏற்பட்டு அதிகமாகவே அவர் அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு வரப்பட்டார்.

இங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அரை மணிக்கு முன்பாகவே அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதற்கு அவருக்கு நெஞ்சுவலியால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இருக்கும் என அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மஹிபாலின் உடல் அவரது குடும்பத்தாரால் இறுதிச்சடங்கிற்காக வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இவருக்கு நேற்று முன்தினம் கரோனா தடுப்பு மருந்து ஊசி செலுத்தப்பட்டிருந்தது.

இவர், முராதாபாத்தின் அறுவை சிகிச்சை பிரிவில் வார்டு பாயாக, கரோனா பரவல் காலத்திலும் தனது பணியை தொடர்ந்தவர். அருகிலுள்ள டவுன் ஹால் பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மஹிபாலுக்கு மனைவி, இரண்டு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் இறந்த தகவலையடுத்து அம்மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.எம்.சி.கர்க் நேரில் சென்று மஹிபால் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

இதில், கரோனா தடுப்பு மருத்து செலுத்தப்பட்ட நாளின் இரவில் மஹிபால் வழக்கம் போல் இல்லை எனவும், மறுநாள் காலை அவருக்கு லேசானக் காய்ச்சல் வந்ததாகவும் மகன் விஷால் தெரிவித்துள்ளார்.

இதனால், மஹிபாலின் உடல் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகளில் இறப்பிற்கான காரணம் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி.யின் மற்ற மாவட்டப் பகுதிகளிலும் மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதில், முராதாபாத்தை போன்ற புகார் இதுவரை வேறு எங்கும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x