விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும்: அமித் ஷா

விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும்: அமித் ஷா
Updated on
1 min read

விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா, இன்று அங்கு பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "ஆட்சிக்கு வந்தநாள் முதல் நரேந்திர மோடி அரசு வேளாண் குடிமக்களின் வருவாயை இருமடங்காக உயர்த்துவது என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி செயல்படுகிறது.

அந்த வரிசையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பலமடங்கு உயர்த்த உதவும். இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானால் விற்கலாம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தேவையில்லாமல் விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்.

அப்படித் தூண்டிவிடுபவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். விவசாயிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் ஆட்சியில் ஏன் விவசாயிகளுக்கு ரூ.6000 மானியம் அளிகவில்லை. அதேபோல், எத்தனால் கொள்கையை ஏன் மறு பரிசீலனை செய்யவில்லை" எனக் வினவியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது பல்வேறு காரணங்களால் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் குடியரசு தினத்தில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பேரணிக்கு எதிரான மத்திய அரசின் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in