

பாஜக, திரிணமூல் ஆகிய இரு மத துருவங்களிலிருந்து மேற்குவங்கத்தை காக்க வேண்டியுள்ளது என்று இடது முன்னணி தலைவர் பீமன் போஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டில் இறுதியில் நடைபெற உள்ளது. இதில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை எதிர்த்து பாஜக களமிறங்கியுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து வரவிருக்கும் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநிலத்தின் மூத்த தலைவர்கள் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
அதேநேரம் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அடுத்த கட்ட பணியாற்ற ஏதுவாக ஜனவரி மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடுகளை முடிவு செய்யுமாறு மாநிலத் தலைமையைக் கேட்டுள்ளதாக இடதுசாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இடது முன்னணி தலைவர் பீமன் போஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
"மதங்களின் இரு துருவங்களாக பாஜகவும் திரிணமூல் காங்கிரஸும் மேற்குவங்கத்தை மாற்றிவைத்துள்ளன.
மதங்களின் இரு துருவங்களாக உள்ள இக்கட்சிகளிடமிருந்து மேற்கு வங்கத்தை காப்பாற்றி ஆக வேண்டியுள்ளது. எனவே பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். எங்களுக்கிடையில் (காங்கிரசும் இடது முன்னணியும்) எந்த தவறான புரிதலும் இல்லை.
எனினும், தேர்தல் டிக்கெட் பகிர்வு குறித்த விவாதம் இன்னும் நடைபெறவில்லை. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில்வரும்.
இவ்வாறு பீமன் போஸ் தெரிவித்தார்.