Last Updated : 25 Oct, 2015 09:57 AM

 

Published : 25 Oct 2015 09:57 AM
Last Updated : 25 Oct 2015 09:57 AM

மகாத்மா காந்தியின் கொள்கைகள் இன்றைய காலத்துக்கும் பொருத்தமானவை: ஐ.நா. தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி கருத்து

மகாத்மா காந்தியின் கொள்கை, கோட்பாடுகள் இன்றைய காலத்துக்கும் பொருத்தமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. அமைப்பின் 70-வது ஆண்டு தினத்தையொட்டி மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மனிதநேய சேவை, உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற இலக்கை அடைவது ஆகிய பணிகளில் 70 ஆண்டுகளை ஐ.நா. நிறைவு செய்துள்ளது. இந்தத் தருணத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள்.

மகாத்மா காந்தியின் கொள்கை, கோட்பாடுகள் இன்றைய காலகட்டத்துக்கும் மிகமிக பொருத்தமானதாக உள்ளன. அதேநேரம், ஐநா-வின் லட்சியங்கள், பணிகளுக்கும் காந்தியின் கோட்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நினைவுகூர விரும்புகிறேன்.

ஐ.நா.வின் பல்வேறு செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மேலும் ஐ.நா.வின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. ஐ.நா. தினத்தில் உலகில் உள்ள பல கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட் டுள்ளன. அதுபோல குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமமும் வண்ண ஒளி அலங்காரத்தில் ஜொலிக்கும். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டது, ஹரியாணாவில் தலித் குடும்பத்துக்கு தீ வைத்ததில் 2 குழந்தைகள் பலியானது என நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து, வன்முறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மோடியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x