Last Updated : 17 Jan, 2021 02:23 PM

 

Published : 17 Jan 2021 02:23 PM
Last Updated : 17 Jan 2021 02:23 PM

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரபல பஞ்சாபி நடிகர் சித்துவிற்கு என்ஐஏ சம்மன்: மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்தவர்

தேசிய புலனாய்வு நிறுவனம்(என்ஐஏ) சமன் அளித்துள்ள பத்திற்கும் மேற்பட்டவர்களில் பிரபல பஞ்சாபி நடிகரான தீப் சிங் சித்துவும் இடம் பெற்றுள்ளார். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவளித்த சித்து, மக்களவை தேர்தலில் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தவர்.

மத்திய அரசிற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடைத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விவசாயப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களில் சிலர், தேசவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாக என்ஐஏவால் சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள், பஞ்சாபை தனியாகப் பிரித்து காலிஸ்தான் எனும் பெயரில் தனி நாட்டை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இவ்வழக்கில், மக்கள் பலனுக்கான நீதி சொஸைட்டி எனும் விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிர்சா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு என்ஐஏ சம்மன் அளித்துள்ளது. விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள இந்த சம்மன், பிரபல பஞ்சாபி நடிகரான தீப் சிங் சித்துவிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பஞ்சாபின் சிறந்த மாடலாக பிரபலனான சித்து அம்மாநில மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகி உள்ளார். இதனால், பஞ்சாபிகளின் அபிமானமும் பெற்ற சித்து விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவளித்தது பெரும் வரவேற்பை பெற்றது.

பஞ்சாபி மொழி திரைப்படங்களின் முகமாகக் கருதப்படும் சித்துவிற்கு என்ஐஏ அளித்த சம்மன் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர் விவசாயிகளுக்கு அளிக்கும் ஆதரவை தடுக்கவே அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இவர் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பஞ்சாபின் தொகுதியில் பாஜகவிற்காகப் போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்திருந்தார். இருப்பினும், மத்திய அரசிற்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் ஆதரவளித்ததால் சித்துவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து நடிகர் தீப் சிங் சித்து கூறும்போது, ‘இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. போராட்டத்தை ஒடுக்க இதுபோல் பல்வேறு வகை மிரட்டல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

சீக் பார் ஜஸ்டிஸ் எனும் வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த சம்மனை விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பங்காக எண்ணி எதிர்கொள்வேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை டெல்லியின் லோதி சாலையிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் தீப் சிங் சித்து ஆஜராக உள்ளார். இவருடன் சம்மன் பெற்ற மற்றவர்களும் ஆஜராகும் விசாரணை நாளை வரை தொடர உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x