Last Updated : 17 Jan, 2021 01:52 PM

 

Published : 17 Jan 2021 01:52 PM
Last Updated : 17 Jan 2021 01:52 PM

பாஜகவில் இணைந்த பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி: உ.பி.யின் துணை முதல்வராக்கத் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.சர்மா, சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். இவரை உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக அமர்த்த அக்கட்சியின் தலைமை திட்டமிடப்படுவதாகத் தெரிகிறது.

உ.பி.யின் மாவ் மாவட்டத்தின் கஜா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் அர்விந்த் குமார் சர்மா. 1988 ஆம் ஆண்டு ஐஏஸ் பெற்றவர் குஜராத் மாநில அதிகாரியானார். இவர், குஜராத்தில் அக்டோபர் 2001 இல் மோடி முதல் அமைச்சரானது முதல் அவரது செயலாளராக இருந்தார்.

இதில் மோடியின் நம்பிக்கையை பெற்றதால் அவர் 2014 இல் பிரதமரான பிறகு ஆர்.கே.சர்மா மத்திய பணிக்கு அழைத்து தனது அலுவலகத்தில் அமர்த்தினார். 2020 முதல் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் செயலாளாரனவர், தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இந்நிலையில், இருதினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் ஏ.கே.சர்மா. இவரை உ.பி. பாஜக சார்பில் அம்மாநில மேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) பதவியில் அமர்த்த முடிவு செய்தது.

ஜனவரி 28 இல் உ.பி.யில் மேலவைக்கு 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவிற்கு சுமார் 10 உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர்.

இதற்காக 4 உறுப்பினர்கள் பெயர்களை நேற்று உ.பி. பாஜக அறிவித்துள்ளது. இதில் தற்போததைய எம்எல்சிக்களான உ.பி.யின் துணை முதல்வர் தினேஷ் சர்மா, பாஜக மாநில தலைவரான சுவந்திர தியோ சிங் மற்றும் லக்ஷமண் ஆச்சார்யா ஆகியோருக்கு மீண்டும் எம்எல்சியாகும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

நான்காவதாக ஏ.கே.சர்மாவும் பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சர்மாவை அம்மாநில ஆட்சி நிர்வாகத்தில் பயன்படுத்த பாஜகவின் தேசிய தலைமை உத்தரவிட்டது காரணமாகக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘சர்மா போன்ற திறமையான அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் மாநிலங்களில் எந்த அரசியல் கட்சியின் ஆட்சிகளும் சிறக்காது.

இதனால், நாடு முழுவதிலும் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் ஓய்வு பெற்ற அல்லது ராஜினாமா செய்த ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி அதிகாரிகளின் உழைப்பை அதிகம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஆர்.கே.சர்மா உபியின் துணை முதல்வராக அமர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் பலன் 2022 இல் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் கிடைக்கும்.’ எனத் தெரிவித்தனர்.

முதன்முறையாக தனிமெஜாரிட்டியில் பாஜக அமைத்த உ.பி. ஆட்சியில் மேலவை தேர்தலுக்கு பின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில், இரண்டு துணை முதல்வர்களான கேசவ் பிரசாத் மவுர்யா மற்றும் தினேஷ் சர்மாவின் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

தினேஷ் சர்மாவை மேலவையின் தலைவராக்க பாஜக திட்டமிடுகிறது. மேலவையின் தலைவராக இருக்கும் சமாஜ்வாதியின் ரமேஷ் யாதவ் பதவி ஜனவரி 31 இல் நிறைவு பெறுகிறது.

இதன் பிறகு தினேஷ் சர்மா வகித்த துணை முதல்வர் பதவியில் எம்எல்சியான ஏ.கே.சர்மா அமர்த்தப்பட உள்ளார். இதுபோல், குடிமைப்பணி அதிகாரிகள் அரசியலில் ஆர்வம் காட்டுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

தமிழகக் கட்சிகளிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ்

தங்கள் பணித்திறனை முறையாக பயன்படுத்தும் என்ற நம்பிக்கையில் 2014 முதல் அவர்கள் பாஜகவில் அதிகமாக சேர்ந்துள்ளனர். இந்தநிலை, சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்திலும் தொடர்கிறது.

இங்கு பாஜக மட்டும் அன்றி திமுக உள்ளிட்ட சில கட்சிகளிலும் வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்களான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்வம் காட்டத் துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x